Last Updated:
கர்நாடக மாநிலம் விஜயபுராவில் நிகழ்ந்துள்ள சம்பவம் ஒன்று, தெரு நாய்களால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்பதை மற்றொரு முறை நிரூபித்துள்ளது.
கர்நாடகா மாநிலம் விஜயபுராவில் 6 வயது சிறுமியை வெறிபிடித்த தெருநாய்கள் சூழ்ந்துகொண்டு கடித்துக் குதறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை கதிகலங்க வைத்துள்ளன. தொடரும் தெரு நாய்களின் அட்டகாசத்திற்கு ஒரு தீர்வு கிடைக்காதா? தெரு நாய்களால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்பதை மற்றொரு முறை நிரூபித்துள்ளன இந்த கொடூரக் காட்சிகள்…
ஒன்றும் செய்யாது. சாதுவான விலங்கு. அப்பாவி நாய்கள். என சிலரால் கூறப்படும் தெரு நாய்கள் சிறு குழந்தைகளை பார்த்தவுடன் ஆக்ரோஷமாக மாறுவது ஏன்? குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யப் போவது யார்?
கர்நாடகா மாநிலம் விஜயபுராவில்தான் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. விஜயபுரா மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை காலை சிறுமி அன்விதா தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றுள்ளார். கடையில் தின்பண்டம் வாங்கிய சிறுமி திரும்பும்போது, ஒரு நாய் அதை பிடுங்க தயாராக நின்று கொண்டிருப்பதை கவனித்திருக்கிறாள் சிறுமி.
உடனே பயந்து பின்வாங்கிய சிறுமி, பதுங்கி ஓரமாக வீட்டுக்கு ஓடி விடலாம் என நினைத்து படியில் இறங்கி ஓடியிருக்கிறாள். ஆனால், அந்த தெரு நாயோ அந்த தின்பண்டத்தை பறிக்கும் நோக்கத்தில் குழந்தையை துரத்தியுள்ளது. பயந்துபோன சிறுமி கீழே விழுந்துவிட அந்த நாய் தாவிச் சென்று குழந்தையை கடித்துக் குதறி இருக்கிறது.
இதைப் பார்த்த மற்ற நாய்களின் கும்பல் உடனடியாக அங்கே சேர்ந்து விட்டது. கும்பலாக சுத்துப் போட்டு அந்த சின்ன சிறுமியை கடித்துக் குதறியிருக்கின்றன. சிறிது நேரம் கழித்து சத்தம் கேட்டு வெளியே வந்த கடை உரிமையாளரான பெண் நாய்களை விரட்டி சிறுமியை காப்பாற்றியிருக்கிறார்.
இந்த சம்பவத்தில் சிறுமி அன்விதாவின் கண், கை, கால்கள் மற்றும் முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சிறுமி அன்விதா, மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, அதே பகுதியில் ஒரு சிறுவன் நாய் கடித்ததால் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. தொடர் நாய்க்கடி சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
விஜயபுராவில் தெரு நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுமியை கடித்துக் குதறிய தெரு நாய்கள்… காண்போரை கதிகலங்கச் செய்யும் காட்சிகள்… இதற்கு ஒரு தீர்வே கிடைக்காதா…?


