Last Updated:
சாமியார் மல்லிகார்ஜுனா முத்தவா, பக்தர்களை கட்டிப்பிடித்து, அரவணைத்து ஆசி வழங்குவதை தனது ஃபார்முலாவாக கொண்டுள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இந்த முறையிலேயே கையாண்டுள்ளார்.
கர்நாடகாவில் வாழும் சாமியார் எனக் கூறிக்கொண்டு கோக்குமாக்கு வேலையில் ஈடுபட்ட இளைஞர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசி வழங்குவதாக பெற்றோர்கள் முன்னிலையில் சிறுமிகளிடம் அத்துமீறியவருக்கு எண்டு கார்டு போடப்படுமா?
வெள்ளை புறாக்களை கையில் தவழவிட்டு தன்னை ஒரு சமாதான புறா ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்தவர்தான் இந்த மல்லிகார்ஜுனா முத்தவா. தன்னை நாடி வருபவர்களுக்கு நோய், நொடி நீங்கும் என்று பிரசாரம் செய்தவரை வாழும் சாமியாராகவே பொதுமக்கள் நம்பி பூஜித்து வருகின்றனர். தங்களது வீடுகளில் போட்டோவை வைத்து அப்பாஜி என போற்றப்படும் சாமியார் மீது குழந்தைகள் நல அமைப்பு புகார் கொடுத்தது ஏன்? நடந்தது என்ன?
கர்நாடக மாநிலம் யாத்கீர் மாவட்டம் ஷாஹாபூரைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுனா முத்தவா. இவர், தன்னை சாமியார் எனக் கூறிக்கொண்டு ஊருக்குள் காவி சகிதமாக உலாவியுள்ளார். ஊர் ஊராகச் சென்று ஆசி வழங்குவதாக சில புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு மக்களை நம்ப வைத்துள்ளார். அதில் ஒரு சில கணிப்புகள் மெய்யானதால் மக்களும் மல்லிகார்ஜுனாவை கொண்டாடியுள்ளனர்.
இதையடுத்து ஷாஹாபூரில் உள்ள கோயிலில் ஆசிரமம் அமைத்து, நானே கடவுள் என்ற ரீதியில் பூஜைகள் செய்து தனக்கென ஒரு பக்தர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். செல்லும் இடமெல்லாம் சில மாய வித்தைகளைக் காட்டி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் பொதுமக்கள் சிலர் அப்பாஜி என அழைத்து, அவரது போட்டோவை தங்களது வீடுகளில் வைத்து வணங்கியுள்ளனர்.
சாமியார் மல்லிகார்ஜுனா முத்தவா, பக்தர்களை கட்டிப்பிடித்து, அரவணைத்து ஆசி வழங்குவதை தனது ஃபார்முலாவாக கொண்டுள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இந்த முறையிலேயே கையாண்டுள்ளார்.
இந்த நிலையில் 7 வயது சிறுமியை, அவரது பெற்றோர் முன்னிலையில் மடியில் வைத்து ஆசி வழங்கியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் விவாதப் பொருளானது. சிறுமியின் பெற்றோரே வீடியோவை இணையத்தில் பதிவிட்டு சாமியாரின் செயல் குறித்து எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இருந்தபோதும், சாமியாரின் மடியில் இருந்த சிறுமி தர்ம சங்கடத்துடன், அசவுகரியமாக இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் தான் தலைமறைவாகவில்லை என்று மல்லிகார்ஜுனா முத்தவா தெரிவித்துள்ளார். போலீசார் அழைத்தால் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் எனவும் கூறியுள்ளார்.
சிறுமிகளுக்கு வில்லங்கமான ஆசி வழங்கி, சர்ச்சையில் சிக்கிய இளம் சாமியார்… போக்சோ சட்டத்தில் வழக்கு…


