Courtesy: kapil
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த
குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன் மூவர் கொண்ட குழு
நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழரசுக்கட்சியின் பதில் பொதுசெயலாளர்
எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழு கூட்டம் வவுனியாவில் இன்று(17) இடம்பெற்றது.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கட்சி எடுத்த தீர்மானத்தை அறிவிப்பதற்கு கடமைப்பட்டுள்ளேன்
கட்சிக்குள்ளே எடுக்கப்பட்ட தீர்மானமாக இருந்தாலும் அத்தீர்மானம் உரியமுறையில்
அறிவிக்கப்படாவிட்டால் அது திரிபுபடுத்தக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. எனவே
அதனை உத்தியோக பூர்வமாக கட்சி எடுத்த தீர்மானத்தை அறிவிப்பதற்கு
கடமைப்பட்டுள்ளேன்.

எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அரசியல் அமைப்பு பேரவையில்
அரசாங்கத்திற்கு சாதகமாக செயற்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அது
தொடர்பாக அவருக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தோம்.
எனவே அந்த பதவியிலிருந்து கட்சியையும் சங்கடப்படுத்தாமல், அவரும்
சங்கடப்படாமல் ராஜினாமா செய்யுமாறு கட்சியின் அரசியல் குழு கடிதம்
அனுபியிருந்தது.
அதில் அவர் இணங்காத காரணத்தினால் நாடாளுமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து
அவர் இறக்கப்பட்டார். அது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
சுமுகமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது
இன்றைய கூட்டத்திலும்
அந்த விடயம் பேசப்பட்டு இறுதியில் சுமுகமாக ஒரு தீர்மானம்
நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் அதற்கு இணங்கி இந்த தீர்மானத்தை நிறை
வேற்றியிருக்கிறோம்.

அந்தவகையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கட்சியில் பதவி நிலையில்
உள்ள மூவர் அதாவது தலைவர், நிர்வாக செயலாளர், பொருளாளர் ஆகியோர் இந்த விடயங்கள்
உண்மையாக நடந்தனவா இல்லையா என்பது தொடர்பாக சிறிதரனுடனும் கலந்துபேசி
ஆராய்ந்து, மத்திய செயற்குழுவிற்கு அறிவிப்பார்கள்.
ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக பேசப்பட்டது. ஆனால் ஒரு இணக்கப்பாடாக இப்படி
ஒரு பொறிமுறை ஏற்பட்டுள்ளது என்றார்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

