சிபு:
சரவாக் மாநிலம் சிபுவில் உள்ள ஒரு வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், வரி செலுத்தப்படாத சுமார் 7,31,000 ரிங்கிட் மதிப்பிலான சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி மாலை 4.25 மணியளவில், லொரோங் உலு சுங்கை மேரா 46J (Lorong Ulu Sungai Merah 46J) பகுதியில் உள்ள இரண்டு அடுக்கு மாடி வீட்டில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது என்று, சரவாக் மாநில சுங்கத்துறை இயக்குனர் டத்தோ நோரிசான் யாஹ்யா இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரித்துள்ளார்.
இந்தச் சோதனையின் போது, 3.43 மில்லியன் சிகரெட் துண்டுகள் மற்றும் பல்வேறு பிராண்டுகளைச் சேர்ந்த 70,518 லிட்டர் மதுபானங்கள் கண்டெடுக்கப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு RM7,31,809 என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தப் பொருட்களுக்கான இறக்குமதி வரி மற்றும் இதர வரிகளைச் சேர்த்தால், அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய சுமார் RM3,472,209 அளவிலான வருவாய் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் பார்வையில் படாமல் இருப்பதற்காக, இந்த வீட்டை ஒரு சேமிப்புக் கிடங்காக (Storage facility) கடத்தல் கும்பல் பயன்படுத்தி வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 1967-ஆம் ஆண்டு சுங்கச் சட்டம் பிரிவு 135(1)(d)-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்குச் சுங்க வரியைப் போல 10 மடங்கு அல்லது RM100,000 (எது அதிகமோ அது) முதல், அதிகபட்சமாக 20 மடங்கு அல்லது RM500,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
மேலும், 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
புகையிலை, மதுபானம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கப் பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், தகவல் வழங்குபவர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் டத்தோ நோரிசான் உறுதியளித்துள்ளார்.




