Last Updated:
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு கிடைக்கும் நீர்வரத்து குறைந்துள்ளதால், செனாப் நதியின் நீர்வரத்தும் திடீரென குறைந்து வருகிறது.இந்தியாவின் சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்திய முடிவு பாகிஸ்தானில் 21% நீர் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து 1960ஆம் ஆண்டு சிந்து நதி ஒப்பந்தத்தை கிடப்பில் போடும் இந்தியாவின் முடிவு பாகிஸ்தானில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு கிடைக்கும் நீர்வரத்து குறைந்துள்ளதால், செனாப் நதியின் நீர்வரத்தும் திடீரென குறைந்து வருகிறது.
இதன் காரணமாக காரீஃப் பருவத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தானில் 21% நீர் பற்றாக்குறை ஏற்படும் என்று சிந்து நதி அமைப்பு ஆணையத்தின் (IRSA) ஆலோசனை கணித்துள்ளது மற்றும் கவலை தெரிவித்துள்ளது. செனாப் நதியின் மீதுள்ள சலால் மற்றும் பாக்லிஹார் அணைகளின் கதவுகளையும் இந்தியா மூடியதால் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்து, பாகிஸ்தானுக்கான நீர்வரத்து கணிசமாக பாதிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு பதிலடி தர கிஷன்கங்கா அணையிலும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே 2025 மே – செப்டம்பர் வரையிலான காரீஃப் பருவத்திற்கு எதிர்பார்க்கப்படும் நீர் கிடைக்கும் தன்மை குறித்து விவாதிக்க IRSA ஆலோசனைக் குழு கூட்டம், இஸ்லாமாபாத்தில் IRSA தலைவர் சாஹிப்சாதா முகமது ஷபீர் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மே – ஜூன் 10 மற்றும் ஜூன் 11 – செப்டம்பர் வரையிலான Kharif பருவ மாதங்களுக்கான நீர் நிலைமை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது. இந்தியாவிடமிருந்து கிடைக்கும் நீர் குறைவாக இருப்பதால், மராலாவில் செனாப் நதி நீர்வரத்து திடீரென குறைந்துள்ளது, ஆரம்ப கால காரீஃப் பருவத்தில் அதிக பற்றாக்குறையை ஏற்படுத்தும் என IRSA வெளியிட்டுள்ள சமீபத்திய செய்திக்குறிப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து தண்ணீர் விநியோகம் குறைவதால், பாகிஸ்தானில் காரீஃப் பருவத்தில் குறிப்பிடத்தக்க தண்ணீர் பற்றாக்குறை ஏற்படப்போவது உறுதியாகியுள்ளது. செனாப் நதி நீர்வரத்து நிலைமை தினமும் கண்காணிக்கப்படும், மேலும் “செனாப் நதியில்” வரத்து குறைவு தொடர்ந்தால், பற்றாக்குறை அதற்கேற்ப மறுபரிசீலனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரீஃப் பருவத்தின் பிற்பகுதியில் பற்றாக்குறை 7% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் அக்னூரில், பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளின் மதகுகள் மூடப்பட்ட பிறகு, செனாப் நதியின் நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் அரசின் முடிவுக்கு உள்ளூர்வாசிகள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
செய்தியாளர்களிடம் பேசிய உள்ளூர்வாசிகளில் ஒருவர், “பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வழங்க விரும்பவில்லை என்றும், அதே நேரத்தில் இந்திய ராணுவம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு அளிப்பதாகவும்” கூறினார். மற்றொரு உள்ளூர்வாசி கல்யாண் சிங் பேசுகையில், “முன்னதாக, செனாப் நதி 25-30 அடி உயரத்தில் பாய்ந்தது. ஆனால், இப்போது இங்கு 1.5-2 அடி தண்ணீர் கூட இல்லை. இதற்குக் காரணம் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுதான்.
பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வழங்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் அனைவரும் இந்திய ராணுவம் மற்றும் பிரதமர் மோடியுடனும் நிற்கிறோம்” என்றார். சிந்து நதி நீர் ஒப்பந்தமானது மேற்கு நதிகளை (சிந்து, ஜீலம், செனாப்) பாகிஸ்தானுக்கும், கிழக்கு நதிகளை (ரவி, பியாஸ், சட்லஜ்) இந்தியாவுக்கும் ஒதுக்குகிறது. அதே நேரம் இந்த ஒப்பந்தம் ஒவ்வொரு நாட்டிற்கும் மற்றொன்றுக்கு ஒதுக்கப்பட்ட நதிகளின் சில பயன்பாடுகளை அனுமதிக்கிறது. இந்த ஒப்பந்தம் சிந்து நதி அமைப்பிலிருந்து இந்தியாவுக்கு 20% தண்ணீரையும், மீதமுள்ள 80%-ஐ பாகிஸ்தானுக்கும் வழங்குகிறது.
சிந்து நதி ஒப்பந்த நிறுத்தம் எதிரொலி… பாகிஸ்தானில் காரீப் பருவத்தில் 21% தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என கணிப்பு…!


