தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இன்றைய தினமும் (16) குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்படும் என அந்த ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலே பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அவருடைய உறவினர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அண்மையில் முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது.
தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடம்
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடம் குறித்து விசேட பரிசோதனை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சாதாரண சிறைக்கூடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்தச் சிறைக்கூடத்திற்குள் முறையான காற்றோட்டம் இல்லாதது உள்ளிட்ட பல பொதுவான அடிப்படைக் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்
சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடத்திற்கு அருகில் இருந்த ஏனைய கைதிகளிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் மேலும் வாக்குமூலங்களைப் பெறவுள்ளதுடன், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவிற்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

