சிங்கப்பூரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 3 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
வழக்குப் பதிவு செய்யப்பட்ட 27 மணி நேரத்திற்குள், மூன்று சந்தேங்க நபர்களும் கைது செய்யப்பட்டனர் என்பது கூடுதல் தகவல்.
மே 9 முதல் 10 வரை, க்ளூனி பார்க் (Cluny Park), டன்னர்ன் க்ளோஸ் (Dunearn Close) மற்றும் எங் நியோ அவென்யூவில் (Eng Neo Avenue) உள்ள வீடுகளில் நடந்த மூன்று திருட்டு சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் விவரம்
மூவரும் Social visit pass என்னும் சமூக வருகை அனுமதியில் சிங்கப்பூர் வந்ததாகவும், மேலும் குற்றங்கள் நடப்பதற்கு ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைந்ததாகவும் மதர்ஷிப் கூறுகிறது.
ஒருவர் ஸ்பெயின்-கொலம்பியா இரட்டைக் குடியுரிமை பெற்ற 60 வயது ஆடவர், இன்னொருவர் மெக்சிகோ-கொலம்பியா இரட்டைக் குடியுரிமை பெற்ற 48 வயது ஆடவர் மற்றும் கடைசி நபர் 51 வயது மெக்சிகன் நாட்டவர் என்பது கூடுதல் தகவல்.

அவர்களில் இரண்டு பேர் ஜலான் குபோரிலும் (Jalan Kubor), ஒருவர் டைர்வைட் சாலையிலும் (Tyrwhitt Road) கைது செய்யப்பட்டனர்.
அந்த மூன்று பேரிடமிருந்தும் வாடகை கார், நகைகள், S$18000 க்கும் அதிகமான ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்கள் மீது வீடு புகுந்து திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது, மேலும் அவர்களை ஒரு வாரம் தடுப்பு காவலில் வைக்க இன்று (மே 12) உத்தரவிடப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், மேலும் அபராதமும் விதிக்கப்படலாம்.

