ஜோகூர் பாரு:
சிங்கப்பூரிலிருந்து கடத்தப்பட்ட சீன நாட்டு பதின்ம வயது மாணவியைக் காணவில்லை என்று அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் ஜோகூர் காவல்துறையினர்அவரை குவந்தானில் கண்டுபிடித்து, பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
தனது 15 வயது மகள் பள்ளிக்கு வரவில்லை என்றும், அவர் அடையாளம் தெரியாதவரால் கடத்தப்பட்டுள்ளார் என்று தன நம்புவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவியின் 48 வயது தந்தை, கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) ஜோகூர் காவல்துறையில் புகார் அளித்ததாக மாநில காவல்துறை தலைவர் எம். குமார் கூறினார்.
“காணாமல் போனதாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு அந்த மாணவி திங்கட்கிழமை (நவம்பர் 25) சிங்கப்பூரில் உள்ள தனது பள்ளிக்குச் செல்லவில்லை. உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) மலேசியாவுக்கு அவர் கொண்டு வரப்பட்டது சோதனைகளில் கண்டறியப்பட்டது.
“உளவுத் தகவலின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) பகாங், குவாந்தானில் உள்ள ஒரு பகுதியில்சோதனை நடத்திய காவல்துறையினர் அம்மாணவியை மீட்டனர். அதே இடத்தில் 22 வயது சீன நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்,” என்று நேற்று (நவம்பர் 27) வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
சந்தேக நபர் நேற்று முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை ஏழு நாட்கள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும், கடத்தப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படுவார் என்று அவர் கூறினார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சட்டம் 2017 (சட்டம் 792),பிரிவு 14ஏ, சிறார் சட்டம் 2001 (சட்டம் 611) பிரிவு 48 (2) தண்டனைச் சட்டத் தொகுப்பு (சட்டம் 574) பிரிவு 361 ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் குமார் மேலும் கூறினார்.


