SINGAPORE: சிங்கப்பூரில் தானியங்கி கியர் (Automatic transmission) கொண்ட கனரக வாகனங்களை ஓட்ட விரும்புவோருக்கு இனி மூன்று உரிம வகுப்புகள் (லைசன்ஸ்) அறிமுகம் செய்யப்படவுள்ளன.
போக்குவரத்து காவல்துறையினால் அறிமுகம் செய்யப்படும் இந்த மூன்று உரிம வகுப்புகளும் வரும் 2025 செப்டம்பர் முதல் நடப்புக்கு வரும்.
வெளிநாட்டு ஊழியர்களை கூடுதலாக வேலைக்கு எடுக்க அனுமதி – ஓட்டுனர்கள் பெரும் மகிழ்ச்சி
இந்த மூன்று புதிய உரிம வகுப்புகளும் ஏற்கனவே நடப்பில் உள்ள வகுப்பு 4A, வகுப்பு 4 மற்றும் வகுப்பு 5 ஆகிய மூன்று உரிம வகுப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக அமைந்துள்ளது.
நடப்பில் உள்ள உரிம வகுப்புகளை (4A, 4, 5) கொண்ட உரிமையாளர்கள், கையால் இயக்கப்படும் (Manual) மற்றும் தானியங்கி (Automatic) கனரக வாகனங்களை ஓட்டலாம்.
வகுப்பு 4P
இந்த உரிமம் உடையவர்கள் 2,500 கிலோவுக்கு மேல் எடையுள்ள தானியங்கி கியர் கொண்ட “வகுப்பு 4” கனரக வாகனங்களை ஓட்டலாம்.
வகுப்பு 5P
இந்த உரிமம் உடையவர்கள் 7,250 கிலோவுக்கு மேல் எடையுள்ள தானியங்கி கியர் கொண்ட “வகுப்பு 5” கனரக வாகனங்களை ஓட்டலாம்.
வகுப்பு 4AP
இந்த உரிமம் உடையவர்கள் தானியங்கி கியர் கொண்ட “வகுப்பு 4A” வாகனங்கள் அல்லது ஆம்னிபஸ்களை ஓட்டலாம். இவை பொது போக்குவரத்து ஆபரேட்டர்களுக்கு மட்டுமே.
Singapore Jobs: இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்து சிங்கப்பூரில் வேலை பார்க்க முடியுமா?
4P வாகன உரிமத்துக்கான வகுப்புகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி உட்லண்ட்ஸில் உள்ள சிங்கப்பூர் பாதுகாப்பு வாகனம் ஓட்டுநர் நிலையத்தில் (SSDC) தொடங்கும் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
SSDC நிலையத்தில் “வகுப்பு 4” வாகன உரிம வகுப்புகளுக்காக பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு வகுப்பு 4P-யில் சேர அழைப்பு விடுக்கப்படும்.
வேலைக்காக வேண்டி உரிமம் தேவைப்படும் ஊழியர்களுக்கும், வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்ட லாரிகளை வைத்திருக்கும் நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட ஓட்டுனர்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படும்.
வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை முன்கூட்டியே பொருத்துவதை ஊக்குவிப்பதற்கும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் அந்த முன்னுரிமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2026 ஜனவரி 1 முதல்…
அதிகபட்சமாக 5,001 கிலோ முதல் 12,000 கிலோ வரை எடை கொண்ட, 2018ஆம் ஆண்டுக்கு முன் பதிவுசெய்யப்பட்ட பழைய லாரிகளில் வரும் 2026 ஜனவரி 1 முதல் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
2027 ஜூலை 1-க்குள்…
அதே போல, 2027 ஜூலை 1-க்குள், 3,501 கிலோ முதல் 5,000 கிலோ வரை அதிகபட்ச எடை கொண்ட புதிய லாரிகள் உட்பட அனைத்து லாரிகளிலும், வாகனம் மணிக்கு 60 கிமீ வேகத்திற்கு மேல் செல்ல அனுமதிக்காத வேகக் கட்டுப்பாடுகள் பொருத்தப்பட வேண்டும்.

