India
oi-Mani Singh S
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவர்களின் தொடர் போராட்டத்தால் பணிந்த ஹேமந்த் சோரன் அரசு, அரசு பணியாளர் தேர்வு ஆணையமான JSSC-CGL தேர்வு மற்றும் டிடிபிஎல் (TDPL) மூலம் நடத்தப்பட்ட தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இதற்கு ஹேமந்த் சோரன் அரசுக்கு நன்றி தெரிவித்த போராட்டக்காரர்கள், 24 நாட்கள் கழித்து எங்கள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளீர்கள். ஆனால் வழக்கை சிபிஐக்கு மாற்றினால் தான் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என கூறியுள்ளனர். இது ஹேமந்த் சோரன் அரசுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.
ஜார்க்கண்டில் அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி ஜார்க்கண்ட் தலைநகரில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பணிந்தது ஜார்க்கண்ட் அரசு
டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டத்தால் மத்திய அரசு பணிந்த நிலையில், ஜார்கண்ட் போராட்டமும் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டே சென்றது. 20 ஆம் தேதி முதல்வர் ஹேமந்த் சோரன் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று மானவர்கள் எச்சரித்து இருந்தனர். ஹேமந்த் சோரன் பதவி விலக வேண்டும் என்று கூறினர்.
மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததால் வழிக்கு வந்த ஜார்க்கண்ட் அரசு, அந்த மாநிலத்தின் அரசு பணியாளர் தேர்வு ஆணையமான JSSC-CGL தேர்வு மற்றும் டிடிபிஎல் (TDPL) மூலம் நடத்தப்பட்ட தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஹேமந்த் சோரன் அறிவித்தார். மேலும், 2014 முதல் டிடிஎல்பி மூலம் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படும் என அறிவித்தார்.
சிபிஐ விசாரணை வேண்டும்
ஆனால் தங்களின் போராட்டத்தை கைவிட மறுத்த மாணவர்கள், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருப்பதாக கூறினர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் தலைவர் ரவீந்திர பாஸ்வான் கூறியதாவது:- சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதனால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் வரை எங்களின் போராட்டம் நடைபெறும்.
எங்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. ஆனாலும் இன்னும் போக வேண்டியுள்ளது. 24 நாட்கள் கழித்து எங்கள் கோரிக்கையை ஏற்ற முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால் இங்கு கேள்வி என்னவென்றால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் வரை நாங்கள் ங்களுடைய பட்டினி போராட்டத்தை தொடருவோம்” என்றார்.
உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார்
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மானவர் தலைவர் தேவேந்திர நாத் மஹதோ தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார். ஜார்க்கண்டில் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்திய நிலையில், ராகுல் காந்தி, ஹேமந்த் சோரனை மாணவர்களை சந்தித்து பேசுங்கள் என்று கூறினார். இதையடுத்தே ஹேமந்த் சோரன் இறங்கி வந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

