Last Updated:
ஒடிசாவில் சாதி மறுப்பு திருமணம் செய்ததால், பெண் குடும்பத்தைச் சேர்ந்த 40 பேர் மொட்டையடித்துக்கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள பைகனகுடா கிராமத்தில் பழங்குடியினர் சமூகத்தினர் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பழங்குடியின இளம் பெண் ஒருவர், பட்டியல் சமூக இளைஞர் ஒருவருடன் நட்பாக பழகியுள்ளார். இவர்களின் நட்பு காதலாக மாறியதும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஆனால், அவர்களின் திருமணத்துக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதை பொருட்படுத்தாத பெண், தனது காதலனை கரம் பிடித்துள்ளார். இதற்கு பெண் வீட்டார் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரை ஒதுக்கியே வைத்துள்ளனர்.
இந்த நிலையில் பழங்குடியின பெண் ஒருவர் சாதி மறுப்பு திருமணம் செய்ததால், அவரின் குடும்பத்தினர் பரிகார பூஜை செய்துள்ளனர். அதன்படி, குல தெய்வ கோவிலில் ஆடு, பன்றி, கோழிகளை பலியிட்டுள்ளனர். இதையடுத்து, பெண்ணின் குடும்ப ஆண்கள் 40 பேர் மொட்டையடித்து, சாமி தரிசனம் செய்துள்ளனர்.
அவர்கள், கூட்டமாக மொட்டையடித்துக்கொண்ட வீடியோவை, கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். சாதி மறுப்பு திருமணத்தை ஒடிசா அரசு ஊக்குவிக்கும் சூழலில், அதை சீர்குலைக்கும் வகையில் 40 பேர் மொட்டையடித்துக்கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட அதிகாரிகள் பைகனகுடா கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, மொட்டையடித்தவர்கள் அனைவரும் தங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை எனவும், தங்களது குல வழக்கத்தின்படியே பரிகார பூஜையில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளனர். இருந்த போதும், அறியாமையால் இதுபோன்ற செயலில் ஈடுபடக் கூடாது என்று அதிகாரிகள் அறிவுரை கூறியுள்ளனர்.
இந்தக் காலத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடைபெறுமா என்று அனைவரும் வியப்புடன் கேள்வி கேட்கும் நிலையில், இதுபோன்ற மூட நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Odisha (Orissa)
June 23, 2025 8:48 AM IST


