கோலாலம்பூர் :
மலேசியாவின் பொது மற்றும் தனியார் சுகாதாரத் துறைகளில் ‘சாதாரண மருந்துகளுக்கு’ (Generic Medicines) முன்னுரிமை அளிக்கும் கொள்கையினால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கத்திற்கு 900 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான நிதி மிச்சமாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அமாட் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற செபெராங் ஜெயா மருத்துவமனையின் புதிய கட்டடத் திறப்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது குறித்து விரிவாக விளக்கினார்.
சுகாதாரத் துறையில் அதிகப்படியான செலவுகளைக் குறைக்கும் வகையில், பிராண்டட் மருந்துகளுக்குப் பதிலாக அதே வீரியம் கொண்ட சாதாரண மருந்துகளைப் பரிந்துரைக்கும் (Generic First Policy) முறையை அரசு ஊக்குவித்து வருகிறது.
சாதாரண மருந்துகள் பிராண்டட் மருந்துகளுக்கு இணையாகச் செயல்படுவதோடு, அவற்றின் பாதுகாப்பு மற்றும் தரம் ஆகியவை உயிரியல் ஆய்வுகள் (Bioequivalence studies) மூலம் உறுதி செய்யப்படுகின்றன.
குறைந்த விலையிலான இந்த மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம், சிகிச்சையின் தரத்தில் சமரசம் செய்யாமல் அரசு நிதியைச் சிக்கனமாகப் பயன்படுத்த முடிகிறது.
சில நோயாளிகள் சாதாரண மருந்துகளைத் தரம் குறைந்தவையாகக் கருதும் மனநிலை இன்னும் உள்ளது. இதனை மாற்றும் வகையில், நிபுணத்துவ மருத்துவர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் நோயாளிகளுக்கு இந்த மருந்துகள் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
சபராங் ஜெயா மருத்துவமனை புதிய கட்டடம்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழாவில், சுமார் 371 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்டுள்ள 9 மாடிக் கட்டடம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு புதிய கட்டடத்தில் 316 படுக்கைகள், 6 அறுவை சிகிச்சை கூடங்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICU) உள்ளன.
இதன் மூலம் செபெராங் ஜெயா மருத்துவமனையின் மொத்த படுக்கை வசதி 729 ஆக அதிகரித்துள்ளது. இது வடமாநில மக்களின் உயர்தரச் சிகிச்சைக்கான முக்கிய மையமாக விளங்கும்.
தாமதமாகும் சுகாதாரத் திட்டங்களைக் கண்காணிக்கப் பொதுப்பணித் துறையுடன் (JKR) இணைந்து செயல்பட்டு வருவதாகவும், புத்ராஜெயா மற்றும் பாப்பார் மருத்துவமனைத் திட்டங்களில் நிலவும் 10 ஆண்டு காலத் தாமதங்களைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.




