நாட்டில் தித்வா புயலால் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கம் மற்றும் உலகளாவிய தேவையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழு ஒன்று இலங்கைக்கு வருகை தர உள்ளது.
குறித்த குழுவானது இன்று (26.03.2026) நாட்டிற்கு வருகைதர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) ஐந்தாவது மற்றும் ஆறாவது கூட்டு ஆய்வுகளை நிறைவு செய்யும் நோக்கில் கொள்கை கலந்துரையாடல்களை நடத்துவதற்காக, இந்தத் தூதுக்குழு ஏப்ரல் 9 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோசக் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொள்கை கலந்துரையாடல்
இந்த வருகையின் போது மேலும் தெரியவருகையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு உள்ளூர் அதிகாரிகளுடன் பொருளாதாரக் கொள்கைகள் குறித்தும், மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் விவாதிக்க உள்ளது.
இலங்கைப் பொருளாதாரம் குறித்த ஒரு மேம்படுத்தப்பட்ட மதிப்பீடு நடத்தப்படும் என்றும், இலங்கைக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச ஆதரவு தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது
ஐந்தாவது மீளாய்விற்கான பணியாளர் மட்டத்திலான உடன்பாடு 2025 ஒக்டோபர் 9 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த மீளாய்விற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) செயற்குழு ஒப்புதல் அளித்தவுடன், இலங்கை 347 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி பெறத் தகுதி பெறும்.
குறித்த வருகையானது ஆறாவது கட்டத்திற்கான மீளாய்வு செயல்முறையை முன்னெடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

