அதிகாரிகளின் சோதனைகளில் இருந்து தப்புவதற்காக, சிறிய அளவிலான பொதிகளைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வர கடத்தல்காரர்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு சர்வதேச தபால் பொதிகள் ஊடாக போதைப்பொருட்கள் கடத்தப்படும் ஓர் ஆபத்தான போக்கு அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத் துறை எச்சரித்துள்ளது.
அதிகாரிகளின் சோதனைகளில் இருந்து தப்புவதற்காக, சிறிய அளவிலான பொதிகளைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வர கடத்தல்காரர்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூன் மாதம் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சுங்கத் துறை ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதாவது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 04 போதைப்பொருள் கண்டறிதல் நடவடிக்கைகளும், தபால் பொதிகள் தொடர்பான 09 சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இந்த அதிரடி நடவடிக்கைகளின் மூலம் மொத்தம் 83.2 கிலோகிராம் போதைப்பொருட்கள் சுங்கத் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக, “குஷ்” (Kush) ரக போதைப்பொருளைத் தபால் மூலம் நாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் அதிகரித்துள்ளன. இதில் பெரும்பாலான பொதிகள் தாய்லாந்திலிருந்து அனுப்பப்பட்டவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
தினமும் இலங்கைக்கு வரும் சர்வதேச தபால்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், ஒவ்வொரு பொதியையும் தனித்தனியாக மனித உழைப்பைக் கொண்டு சோதனை செய்வது சாத்தியமற்றது என புஞ்சிஹேவா விளக்கியுள்ளார். இதன் காரணமாக, சந்தேகத்துக்கிடமான பொதிகளைக் கண்டறிய சுங்கத் துறையினர் நவீன ஸ்கேனர் (Scanner) தொழில்நுட்பத்தையே பெரிதும் நம்பியுள்ளனர்.
தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொரு பொதியிலும் உள்ள போதைப்பொருளின் அளவு சிறியதாகத் தெரிந்தாலும், சமூகத்தில் அதன் தாக்கம் மிகப்பெரியது என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இந்தப் பொதிகள் நேரடியாகப் பயனாளருக்கு அனுப்பப்படுவதால் ஆபத்து அதிகம் என்றும், விற்பனைக்கு முன்னர் இவற்றின் அளவை அதிகரிப்பதற்காக கடத்தல்காரர்கள் ஏனைய பொருட்களுடன் போதைப்பொருளைக் கலந்து விநியோகிப்பதாகவும் சுங்கத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

