சர்வதேச சந்தையிலிருந்து பிணைமுறி மூலம் 1.5 பில்லியன் டொலர்களைத் திரட்ட வேண்டுமாயின், சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் நாட்டின் தரவரிசையை ‘CCC’ நிலையிலிருந்து ‘B’ அல்லது ‘B+’ நிலைக்கு உயர்த்த வேண்டும் என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
2028 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆண்டிற்குச் செலுத்த வேண்டிய கடன் தொகை 4 பில்லியன் டொலர்களாகவும், 2029 – 2031 காலப்பகுதியில் 5 முதல் 6 பில்லியன் டொலர்களாகவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டின் கடன் செலுத்தும் திறன்
“நாட்டின் கடன் செலுத்தும் திறனை வெறும் மொத்த வெளிநாட்டு கையிருப்பை வைத்து மட்டும் கணக்கிட முடியாது.

சர்வதேச நாணய நிதியத்தின் ‘கையிருப்பு போதுமான அளவு மதிப்பீடு’ அளவுகோலின் படி, கடன் செலுத்தும் திறனில் பாதுகாப்பான நிலையை அடைய நாட்டின் கையிருப்பு 12 பில்லியன் டொலர்களாக உயர வேண்டும்.
ஆனால் தற்போது 6.5 பில்லியன் டொலர்கள் மட்டுமே கையிருப்பில் உள்ள நிலையில், அடுத்த ஆண்டிற்குள் அதனை 12 பில்லியனாக உயர்த்துவது சாத்தியமற்ற ஒன்றாகும்.
தற்போது நாட்டில் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி என்பது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காத ஒரு வளர்ச்சியாகவே காணப்படுகிறது.
விவசாயம், கணக்காய்வு மற்றும் மென்பொருள் பொறியியல் போன்ற முக்கிய துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை.
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு ஏற்ப மக்களின் உண்மையான ஊதியம் உயரவில்லை என்பதால், நாட்டின் வறுமை வீதம் 26 சதவீதம் முதல் 27 சதவீதம் வரை அதிகரித்துள்ளது” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

