Last Updated:
கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சையான பேச்சு பேசிய பாஜக அமைச்சர் விஜய் ஷா, தனது வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் 10 முறை மன்னிப்பு கேட்க தயார் என தெரிவித்தார்.
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து பல்வேறுகட்ட ஆலோசனைக்கு பிறகு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ஆபரேஷனை இந்தியா, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தியது. இதனையடுத்து, பாகிஸ்தான் எல்லை மீறி தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாட்டுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வந்தது. அதன்பின் இரு நாட்டுக்கும் இடையே தற்போது, சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக இரு நாடும் மாறி மாறி தாக்கி வந்தபோது, தாக்குதல் குறித்த நிலவரங்களை கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்து வந்தனர். இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் பற்றி நாட்டு மக்களுக்கு விளக்கிய கர்னல் சோபியா குரேஷி குறித்து மத்திய பிரதேசம் பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்தது. பாஜக அமைச்சர், தீவிரவாதிகளுக்கு அவர்களின் சொந்த சகோதரியைப் பயன்படுத்தி பிரதமர் பாடம் கற்பித்ததாக கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ், அதன் எக்ஸ் பக்கத்தில், “மத்தியப் பிரதேசத்தில் பாஜக அமைச்சர் விஜய் ஷா, நமது ராணுவத்தின் துணிச்சலான மகள்களை ‘பயங்கரவாதிகளின் சகோதரிகள்’ என்று அழைத்துள்ளார். இது மிகவும் வெட்கக்கேடானது. இந்தப் பாவத்திற்காக, பிரதமர் மோடியும் பாஜகவும் நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். விஜய் ஷாவை உடனடியாக அவரது பதவியில் இருந்து நீக்க வேண்டும்” எனத் தெரிவித்தது.
இந்நிலையில், தனது பேச்சு புண்படுத்தியிருந்தால் 10 முறை கூட மன்னிப்பு கேட்க தயார் என ம.பி. அமைச்சர் விஜய் ஷா தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “சகோதரி சோபியா சாதி, மதம் கடந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவர், எங்கள் சொந்த சகோதரியை விட மதிக்கப்படும் நபர். தேசத்திற்கு அவர் செய்த சேவைக்காக நான் அவரை வணங்குகிறேன். எங்கள் கனவில் கூட அவரை அவமதிப்பதைப் பற்றி நாங்கள் நினைத்துப் பார்க்க முடியாது. இருப்பினும், என் வார்த்தைகள் சமூகத்தையும் மதத்தையும் புண்படுத்தியிருந்தால், பத்து முறை மன்னிப்பு கேட்கவும் நான் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
சர்ச்சையான கர்னல் சோபியா குரேஷி குறித்த பேச்சு… “10 முறை மன்னிப்பு கேட்கவும் தயார்” – பாஜக அமைச்சர்


