கோலாலம்பூர்:
சரவாக் மாநிலத்தில் இந்த ஆண்டில் மட்டும் ஆகஸ்ட் 20 வரையிலான தரவுகளின்படி 3 பூனைகள் உட்பட மொத்தம் 26 விலங்குகளுக்கு ரேபிஸ் என்கிற வெறிநாய் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சரவாக் கால்நடை மருத்துவச் சேவைகள் துறை (DVSS) தெரிவித்துள்ளது.
அதிர்ச்சியளிக்கும் மரண விகிதம்:
மலேசியா சரவாக் பல்கலைக்கழகத்தில் (Unimas) நடைபெற்ற ‘ரேபிஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாமில்’ சரவாக் துணை பிரீமியரும், பொதுச்சுகாதார அமைச்சருமான டத்தோ அமர் டாக்டர் சிம் குய் ஹியான் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 2017 முதல் சரவாக்கில் மொத்தம் 94 பேருக்கு ரேபிஸ் தொற்று பதிவாகியுள்ளது. அதில் 87 பேர் உயிரிழந்துள்ளனர். ரேபிஸ் நோயின் மரண விகிதம் 93 சதவீதமாக உள்ளது என்றும், இந்த நோயின் அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டால் உயிரிழப்பு நிச்சயம், ஆனால் தடுப்பூசி மூலம் இதை 100% தடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
விலங்குகள் கடிக்கும் சம்பவங்களை உடனடியாக அவசர மருத்துவ நிலையாகக் கருத வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இரு முக்கிய விதிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்:
மேலும் செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் தவறாமல் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
விலங்குகள் கடித்தாலோ அல்லது கீறினாலோ, உடனடியாகக் ஓடும் குழாய் நீரில் சோப்பு போட்டுச் குறைந்தது 15 நிமிடங்கள் நன்றாகக் கழுவ வேண்டும். அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்காமல் உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்திற்குச் செல்ல வேண்டும்.
2030-ஆம் ஆண்டிற்குள் மனித ரேபிஸ் மரணங்கள் இல்லாத நிலையை அடைவதே அரசாங்கத்தின் இலக்காகும். இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கான ‘ரேபிஸ் விழிப்புணர்வுத் தூதர் 2026’ போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.



