International
oi-Rajkumar R
டெஹ்ரான்: அமெரிக்கா ஈரான் இடையே தொடர்ந்து பல மாதங்களாக மோதல் நீடித்து வரும் நிலையில் தற்போது அந்த மோதல் பரபரப்பான கட்டத்தை சந்தித்துள்ளது. ஹோர்மூஸ் நீரிணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கப்பல்கள் மீது அமெரிக்கா மற்றும் ஈரான் படைகள் மாறி மாறி தாக்குதல் நடத்தி உள்ளதால் இரு நாடுகள் இடையே பதற்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் அந்த நீரிணை வழியாக கப்பல்கள் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான மோதல் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, கத்தாரைச் சேர்ந்த எரிசக்தி நிறுவனத்திற்காக கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, ஈரான் ராணுவ உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு தளங்கள் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் நடத்தியது. இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கு போர்
இந்த நிலையில், ஹோர்மூஸ் நீரிணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா மற்றும் ஈரான் படைகள் மாறி மாறி தாக்குதல் நடத்தி உள்ளதால் இரு நாடுகள் இடையே பதற்ற நிலை உருவாகியுள்ளது. நேற்று ஈரானின் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்து இருந்த நிலையில் பாதுகாக்கப்பட்ட ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் அனுமதி இன்றி நுழைய முயன்றதாக அமெரிக்காவின் ஒரு கப்பல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது.
ஹோர்மூஸ் நீரிணை
அது மட்டுமில்லாமல் அமெரிக்காவுக்கு தொடர்புடைய எண்னெய்க் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியது. இதை அடுத்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் 3 ஈரான் எண்ணெய் டேங்கர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளோம் என அமெரிக்காவும் தெரிவித்தது. இப்படி இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் திடீரென இன்று இருநாடுகளுக்கு இடையே மேலும் பதட்டம் அதிகரித்து ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
போர் நிறுத்தம்
இரு நாடுகளிடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தாக்குதல் இரு நாடுகள் இடையேயான போர் நிறுத்த போர் நிறுத்தத்துக்கான வாய்ப்பை குறைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அமெரிக்காவின் இந்த தாக்குதல் போர் குற்றம் என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. அது மட்டும் அல்லாமல் ஈரானின் எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதில் தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் எனவும் ஈரான் கூறி இருக்கிறது.
அணுசக்தி மையம்
இந்த நிலையில் ஈரானை எச்சரித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் நாதன்ஸ் அணுசக்தி மையத்திற்கு அருகே இருக்கும் பிக்-அக்ஸ் நிலத்தடி அணுசக்தி வளாகத்தை தாக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளதும், அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் கூறி இருப்பதும் இரு நாடுகள் இடையே அணு ஆயுத போர் அச்சத்தை அதிகரித்துள்ளது.



