தொழில்கள் மற்றும் செயல்பாடுகள் பிரிவைச் சேர்ந்த 5,108 நிபுணர்களின் பதில்களை அடிப்படையாகக் கொண்ட இந்த அறிக்கை, 20% மற்றும் அதற்கு மேல் சம்பள உயர்வு கூட பணியாளர்களின் அதிருப்தியைத் தடுக்கத் தவறிவிட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது.
பெரும்பாலான சம்பள உயர்வுகள் 5–10% என்ற வரம்பிலேயே இருந்தன. சிறு பிரிவினருக்கு மட்டும் 20% மேல் பெற்றனர். விளம்பரம், கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் எந்தவித சம்பள உயர்வையும் பெறவில்லை என கூறியுள்ளனர். அதே நேரத்தில் எரிசக்தி மற்றும் BFSI போன்ற துறைகள் ஒப்பீட்டளவில் சிறந்த ஊதியங்களை வழங்கியுள்ளன.
“இந்த ஆண்டு அப்ரைஸல் நிறுவன முதலாளியின் நோக்கத்திற்கும், பணியாளரின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையிலான வளர்ந்துவரும் இடைவெளியை பிரதிபலிக்கிறது. இன்றைய தொழில் வல்லுநர்கள் சம்பளம் மட்டுமின்றி இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் வளர்ச்சி, அங்கீகாரம் மற்றும் வேலை -வாழ்க்கை இடையிலான சீரமைப்பு ஆகியவற்றை விரும்புகின்றனர்” என founditஇன் தலைமை வருவாய் மற்றும் வளர்ச்சி அதிகாரி பிரணய் காலே கூறுகிறார்.
விளம்பரம் மற்றும் ஊடகங்கள் “சம்பள உயர்வு இல்லாத” பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. இங்கு பணியாற்றும் 41% ஊழியர்கள் எந்த ஊதிய உயர்வும் பெறவில்லை என்று தெரிவித்தனர். கல்வி (33%), பிபிஓ/ஐடிஇஎஸ் (31%) மற்றும் ஐடி சேவைகள் (32%) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதற்கு நேர்மாறாக, எரிசக்தி மற்றும் BFSI ஆகியவை தாராளமான சம்பள உயர்வுகளை வழங்கியதற்காக தனித்து நின்றன. எரிசக்தி துறையில், 26% தொழில் வல்லுநர்கள் 20%க்கும் அதிகமான சம்பள உயர்வுகளைப் பெற்றனர்.
தலைமைப் பதவிகளில் இருப்பவர்களை விட எக்ஸ்கியூட்டிவ் பதவிகளில் உள்ளவர்கள் அதிக ஆதாயம் பெற்றனர். 11 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட அனுபவமுள்ள நிபுணர்களில் மூன்றில் ஒருவருக்கு எந்த உயர்வும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் 7-10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களில் 17% பேருக்கு மட்டுமே ஊதிய உயர்வு மறுக்கப்பட்டது.
அனைத்து பிரிவுகளிலும், 20% அல்லது அதற்கு மேல் ஊதிய உயர்வு பெற்ற ஊழியர்களிடம்கூட, வேலை மாறுவதற்கான எண்ணம் அதிகமாகவே இருந்தது. 86% பேர் வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினர். குறைந்த சம்பள உயர்வுப் பிரிவுகளில், இந்த எண்ணிக்கை 82% முதல் 87% வரை இருந்தது. இந்தக் கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 32% பேர் மட்டுமே, சம்பள உயர்வு தங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததாகக் கூறினர். மேலும், 36% பேர் மட்டுமே ஒட்டுமொத்த அப்ரைஸல் செயல்முறை பயனுள்ளதாக இருப்பதாகக் கூறினர்.
சம்பள உயர்வுகள் மற்றும் பதவி உயர்வுகளைச் சுற்றியுள்ள வெளிப்படைத்தன்மை, அதோடு சேர்த்து நெகிழ்வுத்தன்மை மற்றும் கேரியரில் வளர்ச்சி ஆகியவை தற்போதைய பதவிகளில் நீடிக்கத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு முதன்மையான முன்னுரிமைகளாக இருந்தன. இந்த கணக்கெடுப்பு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறது. 2025-ம் ஆண்டில், ஒரே நிறுவனத்தில் நீடிப்பதற்கு சம்பள உயர்வு ஒரு காரணமல்ல. இந்திய நிறுவனங்களைப் பொறுத்தவரை, இது ஒரு எச்சரிக்கை மணியாகும்.
July 23, 2025 9:01 AM IST
சம்பள உயர்வுக்குப் பிறகும் வேறு நிறுவனங்களுக்கு மாற திட்டமிடும் 85%க்கும் மேற்பட்ட ஊழியர்கள்…! காரணம் இதுதான்…

