கோலாலம்பூர், ஜனவரி 29:
மலேசியாவில் மானிய விலையிலான பாக்கெட் சமையல் எண்ணெய் இனி உள்நாட்டு குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படுமென அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த அதிரடித் திட்டத்தின்படி, வெளிநாட்டினர் மானிய விலையில் எண்ணெய் வாங்கத் தடை விதிக்கப்படுகிறது என்று, உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவினத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அர்மிஸான் முஹமட் அலி கூறினார்.
1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், eCOSS எனும் புதிய டிஜிட்டல் கண்காணிப்பு முறை மூலம் இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் எண்ணெய் விநியோகச் சங்கிலி முழுமையாகக் கண்காணிக்கப்பட்டு, கடத்தல் மற்றும் கறுப்புச் சந்தை முறைகேடுகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்.
தகுதியுள்ள மலேசியர்களுக்கு மட்டுமே மானியம் சென்றடைவதை உறுதி செய்ய, இத்திட்டம் மைகாசே (MyKasih) தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இணைய வசதி இல்லாதவர்கள் மற்றும் முதியவர்கள் சிரமமின்றி எண்ணெய் பெறுவதற்கு வசதியாக, தங்களின் மைகாட் அடையாள அட்டையை பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே புத்ராஜெயா மற்றும் ஜோகூர் பகுதிகளில் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்ட இந்த டிஜிட்டல் முறை, மார்ச் மாதம் முதல் நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நாட்டின் மானிய நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது.




