லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்ற தீர்ப்பில் முக்கியமாக கூறப்பட்டிருப்பது, ‘சமூக வலைதளங்கள் மக்களை அடிக்ஷனாக்குவது போல’ என்பதாகும்.
ஆம்… சமூக வலைதளத்தின் அல்காரிதம் நம்மை ஃபாலோ செய்வதுபோல பக்காவாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் என ஏதேனும் ஒன்றில், ஏதாவது ஒன்றை தேடினாலே, மற்ற சமூக வலைதளங்களிலும் அதை காட்டும்.
உணவு சம்பந்தமாக பார்க்கும் ஒருவருக்கு, அவர்களது ஃபீடில், ஸ்க்ராலில் தொடர்ந்து உணவு குறித்தே காட்டி அவர்களை அந்தச் சமூக வலைதளத்தை விட்டு நீங்காமல் பத்திரமாக பார்த்துகொள்கின்றன அவை.

மேலும், இந்த ஆப்களை முதன் முதலாக இன்ஸ்டால் செய்யும் போது, நமது வயதைக் கொடுத்திருப்போம். அதற்கேற்ற வயதுக்கேற்ப ரீல்கள், ஷார்ட்ஸ்கள், போஸ்ட்கள் திரும்ப திரும்ப வந்து நமக்கு பொழுதுப்போக்காக மாறி, நம்மை கட்டி வைத்துவிடுகின்றன.
இன்னும் ஒரு படி மேலே போய், இன்டர்நெட் ‘ஆன்’ ஆன மொபைல் போன் அல்லது லேப்டாப் அருகில் இருக்கும் போது, ஏதேனும் ஒரு வார்த்தையை சொல்லிவிட்டால் போதும். அதை ‘கீவேர்டாக’ எடுத்து, அதையும் நமது ஃபீடுகளில் காட்டுகிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், பாடி சோடாவின் கொண்டையைப் போல, சமூக வலைதளங்கள் அனைத்து இடங்களுக்கும் நம் கூடவே வந்துகொண்டிருக்கிறது.

