ஸ்மார்ட்போன் யுகத்தில் பிறரைப் பற்றித் தவறாகப் பேசுவதற்கும், அவதூறு பரப்புவதற்கும் சமூக வலைதளங்கள் முக்கிய கருவியாக உள்ளன. வாட்ஸ்அப், ஃபேஸ்புக், யூடியூப் என சமூக வலைதளங்கள் பெருக, போலித் தகவல்களும் அவதூறுகளும் வரிசை கட்டி வரத் தொடங்கியுள்ளன. உண்மையான செய்திகளைவிட, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவும் போலித் தகவல்களை மக்கள் அதிகம் நம்புகின்றனர்.
இந்நிலையில், எக்ஸ் தளம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளங்களுக்கு, அவற்றின் தளங்களில் இருந்து குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் படங்கள், வீடியோக்கள், மக்களை தவறாக வழிநடத்தும் பதிவுகள் போன்ற சட்டவிரோத பதிவுகளை நீக்கும்படி மத்திய அரசு நோட்டீஸ் பிறப்பித்தது. கடந்த ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பதிவுகளை நீக்கும்படி நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து எக்ஸ் தளம் தரப்பில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லி மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், அவதூறு கருத்துகள் தொடர்பான பதிவுகள் மற்றும் வீடியோக்களை நீக்கும்படி சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் பிறப்பித்தவற்றில் 30 விழுக்காடு மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசுத் துறைகள் சார்ந்தவை என்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வரவு வைப்பேன் என்று வாக்குறுதியளித்த வீடியோவை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதேபோன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசியது போன்று திரித்துப் பரப்பப்பட்ட வீடியோவை நீக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகனும், ஐசிசி தலைவருமான ஜெய் ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிரான அவதூறு கருத்துகளை நீக்கும்படியும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்து, இஸ்லாமியர்களுக்கு எதிரான மதரீதியான கருத்துகளை நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Also Read | Bank Holidays | ஏப்ரல் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..? லிஸ்ட் இதோ..!
சமூக வலைதளங்களில் இருந்து நீக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்திய முக்கிய தகவல்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக எக்ஸ் நிறுவனம் வெளியிடாமல் தவிர்த்து வந்த நிலையில், தற்போது மத்திய அரசுக்கு எதிரான வழக்கில் எக்ஸ் தளம் இந்தத் தகவல்களைப் பகிர்ந்துள்ளது.
சமூக ஊடகங்களில் சட்டவிரோத கருத்துகளை உடனடியாக அகற்றுவதற்கு உதவும் வகையில் விசாரணை முகமைகள், சமூக ஊடக தளங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களிடையே ஒருங்கிணைப்பை எளிதாக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள சஹ்யோக் (SAHYOG) போர்டல் சோதனை முறையில் மட்டும் இருப்பதாகவும், அது பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் சமூக ஊடக தளங்களின் உதவியின்றி சர்ச்சைக் கருத்துகளை நீக்க முடியும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 30, 2025 7:38 PM IST

