கடந்த வெள்ளிக்கிழமை பெனாம்பாங்கில் மானிய விலையில் வழங்கப்படும் டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சியை, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் சபா கிளை முறியடித்து, 12,89 ரிங்கிட் மதிப்புள்ள டீசலைப் பறிமுதல் செய்தது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக டீசல் நிரப்பியதாகக் கூறப்படும் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரை அதிகாரிகள் கைது செய்ததாக அதன் இயக்குநர் ஷாரில் நிசாம் ஷாஹிதின் தெரிவித்தார்.
கோத்த கினபாலுவைச் சுற்றியுள்ள பல பெட்ரோல் நிலையங்களில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாகக் கண்காணித்து, தொடர்ச்சியாக உளவுத் தகவல்களைச் சேகரித்ததன் விளைவாகவே இந்தக் கைது நடவடிக்கையும் பறிமுதலும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். சந்தேக நபர் நான்கு சக்கர இயக்கி கொண்ட இசுசு ட்ரூப்பர் வாகனத்தைப் பயன்படுத்தி வந்ததாகவும், ஒரு பெட்ரோல் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டதாகவும் கண்டறியப்பட்டது.
மேற்கொண்டு நடத்திய சோதனையில், சந்தேக நபர் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி ஒரு கூடுதல் தொட்டியில் டீசல் நிரப்பிக் கொண்டிருந்தது தெரியவந்தது,” என்று அவர் கூறியதாக பெர்னாமா இன்று செய்தி வெளியிட்டுள்ளது. சோதனையில் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தொட்டியில் 250 லிட்டர் டீசல் இருந்ததும் கண்டறியப்பட்டதாக ஷாரில் கூறினார். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் வாகனம், டீசல், ஒரு மின்சார பம்ப் மற்றும் ரப்பர் குழாய்கள் ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார். அந்த நபர் மற்றும் பெட்ரோல் நிலைய உரிமையாளர் மீது 1961 ஆம் ஆண்டின் பொருட்கள் வழங்கல் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும் என்று ஷாரில் கூறினார்.




