சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு
விசாரணையொன்றை முன்னெடுத்துள்ள நிலையில், சிறப்புரிமை மீறல் குறித்த பிரச்சினையை ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல்
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்படி அவர் நாடாளுமன்றுக்கு தலைமை
தாங்கவோ அல்லது அரசமைப்புச் சபையின் தலைவர் பதவியை வகிக்கவோ
சட்டப்படியோ
ஒழுக்கவியல் பிரகாரமோ உரிமையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை குறித்த சிறப்புரிமை மீறல் பிரச்சினை அவர்
முன்வைத்தார்.
சட்டபூர்வ நடைமுறை
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,
“சபாநாயகர் பதவியை வகித்தல், நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்குதல்
மற்றும் அரசமைப்புச் சபையின் தலைவராகச் செயற்படுதல் தொடர்பில் எழுந்துள்ள
சட்ட, ஒழுக்கவியல் மற்றும் நிறுவன நம்பகத்தன்மை சார்ந்த சிறப்புரிமைப்
பிரச்சினையாக இது அமைகின்றது.

1953 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க நாடாளுமன்ற
(அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும்
நிலையியல் கட்டளை 29 இன் பிரகாரம் இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் பதவிக் காலத்தில் அரச வளங்கள் மற்றும் வசதிகளைப் பயன்படுத்தியதில்
இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பிலேயே ஆணைக்குழு
விசாரித்து வருகின்றது.
ஆணைக்குழு விசாரணை நடத்துவதனால் மாத்திரம் ஒருவர்
குற்றவாளியாக மாட்டார் என்பதையும், சட்டபூர்வ நடைமுறைகள் முடியும் வரை
அவருக்குக் குற்றமற்றவர் என்ற அனுமானம் உண்டு என்பதையும் ஆரம்பத்திலேயே
தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
நம்பகத்தன்மை தொடர்பில் கேள்வி
சுதந்திரமான ஆணைக்குழுக்களுக்கு உயர் அதிகாரிகளை நியமிக்கும் அரசமைப்புச்
சபையின் தலைவராகவும், விசாரணைக்குத் தேவையான சாட்சியங்களை வழங்கும்
நாடாளுமன்றத்தின் தலைவராகவும் அவர் தொடர்வது நம்பகத்தன்மை தொடர்பில் பல
கேள்விகளை எழுப்புகின்றது.

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச்
சட்டத்தின் 162 ஆம் பிரிவின் கீழ் சபாநாயகரும் ‘அரசு ஊழியர்’ என்ற
வரையறைக்குள் அடங்குவதால், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 107 ஆம் பிரிவின்படி
விசாரணைக்கு உட்படுத்தப்படும் நபர் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் தலையிட
முடியாது.
எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள ஊழல்
எதிர்ப்புச் சட்டத் திருத்தத்துக்கு அரசமைப்பின் 79 ஆம் உறுப்புரையின்படி
சபாநாயகர் தனது கையொப்பத்துடன் சான்றளிக்க வேண்டும்.
எனினும், தற்போதைய சட்ட
ஏற்பாடுகளின்படி சபாநாயகரால் அந்தச் சான்றிழைப் பதிவு செய்ய முடியாது.
மேலும், ஆணைக்குழுவின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட
மதிப்பீடுகளைச் சபையில் சமர்ப்பித்தமை போன்ற நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட
முடியாது.
இது வெறுமனே அரசமைப்புச் சார்ந்த பிரச்சினை மட்டுமல்லாது, நலன் முரண்பாடு
தொடர்பான கடுமையான சட்ட மற்றும் ஒழுக்கவியல் பிரச்சினையாகும்.” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26

