புக்கிட் காயு ஹித்தாம் அருகே கடந்த மாதம் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட குடியேறிகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இரண்டு ராணுவ வீரர்கள் இன்று அலோர் ஸ்டார் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி ஷர்மிலா அப்துல் சமத் முன்னிலையில் குற்றச்சாட்டு தனித்தனியாக வாசிக்கப்பட்டபோது, 34 வயதான சுல்ஹில்மி அக்வா ஏ ரஹ்மான் மற்றும் 26 வயதான ஜோஹான் இஸ்கண்டார் ஷா ஜெஃப்ரி பிடின் ஆகியோர், குற்றச்சாட்டைப் புரிந்துகொண்டதாகத் தலையசைத்துத் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரிடமிருந்தும் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றச்சாட்டின்படி, 19 வயதான பினாஜோ மற்றும் 29 வயதான அன்டோய் என அடையாளம் காணப்பட்ட இரண்டு மியான்மர் நாட்டினரை, டொயோட்டா யாரிஸ் காரைப் பயன்படுத்தி சுல்ஹில்மி கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில், 61 வயதான மியான்மர் நாட்டவரான வின் ஷ்வே என்பவரை, பெரோடுவா பெஸ்ஸா காரைப் பயன்படுத்தி கடத்தியதாக ஜோஹான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மே 22 அன்று இரவு சுமார் 7.13 மணியளவில், புக்கிட் காயு ஹித்தாம் குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ICQS) வளாகத்தில் உள்ள சோதனைச் சாவடி ஃபாக்ஸ்ட்ராட்டில், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் மீது, ஆட்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் 2007 (சட்டம் 670)-இன் பிரிவு 26A-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. இப்பிரிவின் கீழ், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஜுல்ஹில்மி சார்பில் வழக்கறிஞர் ஜி. சண்முகம் ஆஜரானார். ஆனால் ஜோஹான் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. இந்த வழக்கை விசாரித்த துணை அரசு வழக்கறிஞர் நர்ஃபதின் மஸ்துரா அஸ்ரி, குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஜாமீன் வழங்கவில்லை. வழக்கு விசாரணைக்காக ஆகஸ்ட் 17-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.




