இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில்லின் சதத்தால், இந்திய அணி முதல் நாளின் முடிவில் 359 ரன்கள் குவித்தது.
ஜெய்ஸ்வாலின் இந்த சதத்தின் மூலம் அவர் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் யாரும் படைக்காத சாதனையை படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் கோப்பையின்போது, ஜெய்ஸ்வால் முதல்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் போட்டியை விளையாடினார். அவர் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் அவர் அபாரமாக 161 ரன்களை விளாசினார். அதேபோல இங்கிலாந்து மண்ணில் முதல்முறையாக அவர் நேற்று களமிறங்கிய போட்டியில் சதம் விளாசியுள்ளார்.
இதன் மூலம் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் விளையாடிய முதல் போட்டியிலேயே சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
இதுவரை இங்கிலாந்து மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்த வீரர்கள்:
1. 146 – முரளி விஜய் (2014)
2. 133 – விஜய் மஞ்சரேகர் (1952)
3. 131 – சவுரவ் கங்குலி (1996)
4. 129 – சந்தீப் பாடேல் (1982)
5. 112 – அப்பாஸ் அலி பேக் (1959)
6. 101 – யஷஸ்வி ஜெய்ஸ்வால் (2025)
அதேபோல இதுவரை மோட்கன்ஹல்லி ஜெய்சிம்ஹா, சுனில் கவாஸ்கர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் ஆஸ்திரேலியா மண்ணில் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்துள்ளனர். இந்த இரண்டு பட்டியலிலும் இருப்பது ஜெய்ஸ்வால் மட்டும் தான்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்களை குவித்துள்ளது.
June 21, 2025 12:47 PM IST

