Last Updated:
இந்தியாவுக்காக அவர் கடைசியாக 2001ல் இலங்கைக்கு எதிராக விளையாடினார். உள்நாட்டு முதல் தர கிரிக்கெட்டில், குராசியா குறிப்பிடத்தக்க முத்திரையைப் பதித்தார்.
இந்தியாவில் மிகவும் சவாலான தேர்வுகளில் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆண்டுதோறும், ஆயிரக்கணக்கானோர் அதிகாரியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் நுழைவுத் தேர்வை எழுதுகின்றனர். ஆனால், இதில் சிலர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள், அரசு ஊழியராக வேண்டும் என்பதற்காக தங்கள் வேலையை விடுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்தியாவுக்காக அறிமுகமாகும் முன்பு ஒரு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?.
யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே சர்வதேச கிரிக்கெட் வீரரான அமய் குராசியா ஆவார். இவர் 17 வயதில் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்த அமய் குராசியா, 1999ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான பெப்சி கோப்பையில் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். சுவாரஸ்யமாக, அதற்கு முன்பே அவர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். 17 வயதில், அமய் தனது உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். இந்தியாவில் மிகக் கடினமான போட்டித் தேர்வுகளில் ஒன்றில் தேர்ச்சி பெற்ற போதிலும், கிரிக்கெட் மீதான அவரது ஆர்வம், சிவில் சர்வீசஸ் பதவியை விட ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக வாழ்க்கையைத் தொடர அவரை வழிநடத்தியது.
1972இல் பிறந்த அமய் குராசியா ஒரு இடது கை பேட்ஸ்மேன். அவர் 1999 இல் புனேவில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்தப் போட்டியில், அமய் 45 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார், அதில் பல பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் போட்டியில், இந்தியா 51 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், வீரேந்தர் சேவாக் மற்றும் அஜய் ஜடேஜா உள்ளிட்ட இந்திய கிரிக்கெட்டின் சில பெரிய ஜாம்பவான்களுடன் அமய் குராசியா டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்து கொண்டார்.
இந்தியாவுக்காக அவர் கடைசியாக 2001ல் இலங்கைக்கு எதிராக விளையாடினார். உள்நாட்டு முதல் தர கிரிக்கெட்டில், குராசியா குறிப்பிடத்தக்க முத்திரையைப் பதித்தார். அவர் ஒரு நிலையான ஆட்டக்காரராகவும், 199 போட்டிகளில் 7,000 ரன்களுக்கு மேல் குவித்து, ஒரு டாப்-ஆர்டர் பேட்ஸ்மேனாகத் தனது திறமையையும் நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்தினார். ஊடக அறிக்கைகளின்படி, அமய் குராசியா தற்போது இந்திய சுங்கம் மற்றும் மத்திய கலால் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். ரஜத் படிதர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் போன்ற வளர்ந்து வரும் வீரர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் அவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளார்.
June 02, 2025 2:16 PM IST


