கோலாலம்பூர்,
கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி கோழி இறைச்சிக்கான மானியம் நிறுத்தப்பட்டபோதிலும், சந்தை விலை நிலையானதாகவே உள்ளது என உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் டத்தோ டாக்டர் புஸியா சாலே இன்று மக்களவையில் தெரிவித்தார்.
அரசாங்கம் மானியத்தை நிறைவு செய்ததற்குப் பிறகும், கோழி விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கடந்த காலங்களில் சந்தை பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
“கோழி உற்பத்தி செலவின் 70% தீவனச் செலவாகும். எனவே, தீவன விலை நிர்ணயத்தில் ஆதிக்கம் செலுத்தும் குழுக்களை ஒடுக்குவதும் நாங்கள் எடுத்த முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும்,” என்று அவர் விளக்கினார்.
2023 நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து, கோழி விலையைத் தொடர்புடைய அமைச்சு தினசரி கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் விலை நிலை தெளிவாக பதிவாகி வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
“தற்போது மானியம் வழங்கப்படவில்லை என்றாலும், முழுமையான வழங்கல் சங்கிலியை நாங்கள் கண்காணித்து, விலையைச் சமநிலைப்படுத்தி வருகிறோம். இதன் விளைவாக, சில பகுதிகளில் விலை கூட குறைந்துள்ளது,” என துணை அமைச்சர் தெரிவித்தார்.
NACCOL கண்காணிப்பு: தேசிய வாழ்க்கைச் செலவு நடவடிக்கை மன்றம் (NACCOL) ஊடாக வாழ்க்கைச் செலவினம் குறைத்தலைக் கண்காணிக்கும் முயற்சி தொடர்ந்து நடைமுறையில் உள்ளதாகவும், இதன் பயன்கள் பொதுமக்களிடம் நேரடியாக சென்று கொண்டிருப்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விடயத்தில், சுங்கை பட்டாணி தொகுதியைச் சேர்ந்த ஹராப்பான் உறுப்பினர் டாக்டர் முகமது தவ்பிக் ஜோஹாரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், துணை அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.




