கோல சிலாங்கூர், ஜெராம், புலாவ் அங்சா கடற்கரையோரத்தில், சனிக்கிழமையன்று பாறைகளுக்கு மத்தியில் கேன்வாஸ் துணியால் சுற்றப்பட்ட நிலையில் ஒரு ஆணின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்டது.
கோல சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் அஸஹருதீன் தாஜுதீன் கூறுகையில், மாலை சுமார் 4.50 மணியளவில், அந்த இடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு மீனவர், கயிற்றால் கட்டப்பட்டு துர்நாற்றம் வீசும் சந்தேகத்திற்கிடமான ஒரு பொட்டலத்தைக் கண்டதாகத் தகவல் அளித்து காவல்துறையை அழைத்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது. அந்த சடலம் பிரேத பரிசோதனைக்காக அல்-சுல்தான் அப்துல்லா மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பிரேத பரிசோதனையில் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததே மரணம் நிகழ்ந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்த வழக்கு குறித்து தகவல் தெரிந்தவர்கள், விசாரணை அதிகாரி கைரோல் ஹிஷாம் ஷம்சுதீனை 03-3289 1222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.




