2015- ஆம் ஆண்டு, பிகார் சட்டமன்றத் தேர்தலில் ராகோபூர் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசியலில் நுழைந்தார். அப்போது நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டணியாக இருந்தது ராஷ்டிரிய ஜனதா தளம்.
துணை முதலமைச்சராக இருந்தபோது, சாலைகளில் உள்ள குழிகள் குறித்த புகார்களைப் பெற அவர் ஒரு வாட்ஸ்அப் எண்ணை வெளியிட்டிருந்தார். அந்த எண்ணுக்குச் சாலைப் புகார்களை விட, 44,000க்கும் அதிகமான திருமண முன்மொழிவுகள் இளம் பெண்களிடமிருந்து வந்தன. இது ஒரு சர்ச்சையாகவே மாறியது.
தேஜஸ்வி யாதவின் துணை முதலமைச்சர் பதவி இரண்டே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. 2017 ஆம் ஆண்டு, தேஜஸ்வி யாதவ், அவரது தந்தை லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது தாய் ராப்ரி தேவி உள்ளிட்டவர்கள் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.
லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேயின் ஐஆர்சிடிசி ஹோட்டல் ஒப்பந்தங்களை ஒரு தனியார் நிறுவனத்திற்குக் கொடுத்து அதற்கு பதிலாக மதிப்புமிக்க நிலங்களை யாதவ் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்திற்கு மாற்றிக்கொண்டதாக சிபிஐ குற்றம் சாட்டியது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவை பதவி விலக கோரினார். தேஜஸ்வி யாதவ் மறுத்ததை தொடர்ந்து நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். பின்னர், 2022- ஆம் ஆண்டு அதே நிதிஷ் குமார் அமைச்சரவையில் மீண்டும் துணை முதலமைச்சர் ஆனார். இம்முறையும் துணை முதலமைச்சர் பதவி இரண்டு ஆண்டுகள் தான் நீடித்தது.
தேஜஸ்வி யாதவ் இரண்டாவது முறையாக துணை முதலமைச்சராக இருந்த போது, சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பணி நியமனங்கள் குறிப்பாக ஆசிரியர் பணிகள் குறுகிய காலத்தில் வழங்கப்பட்டன. இந்தப் பெருமை பெரும்பாலும் தேஜஸ்வியையே சாரும். துணை முதலமைச்சராக, அவர் சாலை கட்டுமானம் மற்றும் பாலங்களின் மேம்பாடு போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்களில் கவனம் செலுத்தினார்.
தனது தந்தையின் பாணியில், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் மூலம் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் ஏழைகளுடன் நேரடித் தொடர்பைப் பேணுவதில் அவர் திறமையானவர். தேஜஸ்வி யாதவ் தனது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு சவால்களையும் ஊழல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டு வருகிறார்.
அரசியலில் அடி எடுத்து வைக்கும் முன், தேஜஸ்வி யாதவ் கிரிக்கெட் வீரர். 15 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் டெல்லி அணியின் ஆல்-ரவுண்டராக இருந்தவர், விராட் கோலியின் தலைமையின் கீழ், 15 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடியுள்ளார்.
டெல்லி U-17 கிரிக்கெட்டில் மும்பை அணிக்கு எதிராக ஒரு சதம் அடித்து தனது அணி வெற்றிபெற காரணமாக இருந்தார். அவர் தனது விளையாட்டு வாழ்க்கையைத் தொடர பத்தாம் வகுப்புடன் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டார். அவர் ஒரு நாள் போட்டிகள், முதல் தரப் போட்டி, மற்றும் T20 போட்டிகளில் ஜார்கண்ட் மாநிலத்திற்காக விளையாடினார்.
ஐபிஎல் தொடரில், 2008 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் ஒரு ஆட்டத்தில் கூட விளையாடும் அணியில் இடம்பெறவில்லை. மாற்று வீரர்களின் பட்டியலில் மட்டுமே இருந்தார். தேஜஸ்வி யாதவ் 2013 ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து விலகி, தனது தந்தையின் வழியைப் பின்பற்றி அரசியலில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார்.
November 13, 2025 7:23 PM IST

