கோயம்புத்தூரில் 40 ஏக்கர் ரெடி.. மொத்தமாக கையில் எடுக்கும் முன்னணி நிறுவனம்!
இந்தியா தற்போது சீனாவுக்கு இணையாக எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் பெரும் வளர்ச்சியும், வெற்றியும் கண்டிருக்கும் வேளையில், இத்துறையில் ஏற்கனவே டாடா, ரிலையன்ஸ் போன்றவை இருக்கும் வேளையில் தற்போது எல் அண்ட் டி நிறுவனம் இத்துறையில் இறங்க முடிவு செய்துள்ளது.
இதற்காக எல் அண்ட் டி நிர்வாகம், L&T Electronic Products & Systems (LTEPS) என்ற தனி நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனத்தின் தலைமையகம் பெங்களூரில் அமைக்க திட்டமிட்டாலும் உற்பத்திக்காக கோயம்புத்தூரை தேர்வு செய்துள்ளது.

எல் அண்ட் டி நிறுவனத்தின் Lakshya 2031 திட்டத்தின் நாட்டின் அனைத்து முக்கிய உற்பத்தி துறையிலும் நுழைந்து உள்நாட்டு சேவையை தாண்டி வெளிநாட்டு சேவைகளையும் பூர்த்தி செய்யும் திட்டத்தில் தீவிரமாக உள்ளது.
L&T Electronic Products & Systems தற்போது தனது உற்பத்தியை துவங்குவதற்காக கோயம்புத்தூரில் சுமார் 40 ஏக்கர் நிலத்தை கைப்பற்றியுள்ளது. இங்கு அமைக்கப்படும் தொழிற்சாலையில் பவர் எலக்ட்ரானிக்ஸ், மொபிலிட்டி, தொழிற்துறைக்கான ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன், கம்யூனிகேஷன் பிளாட்பார்ம்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் டிசைன் மற்றும் உற்பத்தியில் பணியாற்ற உள்ளது.
இத்தொழிற்சாலை L&T நிறுவனத்தின் R&D, தொழில்நுட்ப கூட்டணி, டெஸ்டிங் சென்டர் என இணைத்து பணியாற்ற உள்ளது, இது தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதிக்கு பெரிய அளவில் பலம் சேர்க்கும். இத்தொழிற்சாலையில் சுமார் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
L&T நிறுவனம் தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய கட்டுமான திட்டங்களை செயல்படுத்தினாலும் உயர்தர டெக் துறைகள் குறிப்பாக டேட்டா சென்டர், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, ஐடி சேவை போன்றவற்றுக்கு தமிழ்நாட்டை முக்கிய முதலீடு தளம், விருப்ப மாநிலமாக கொண்டு உள்ளது.
சமீபத்தில் சென்னையில் இருக்கும் ஒரு டேட்டா சென்டரை விரிவாக்கம் செய்வதற்காக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது.
