கோலாலம்பூர் | மார்ச் 12, 2026:
கோலாலம்பூர், ஜாலான் கோம்பாக் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் போலீசார் நடத்திய சோதனையின் போது, கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தப்பிக்க முயன்ற 52 வயது உள்ளூர் ஆடவர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
நேற்று புதன்கிழமை (மார்ச் 11) இரவு சுமார் 9:07 மணியளவில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது என்று, கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மார்சஸ் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு தொடர்பாக, விசாரணைக்குத் தேவையான சந்தேக நபர்களைக் கைது செய்ய போலீசார் அங்கு சென்றிருந்தனர். போலீசாரைக் கண்டதும், வீட்டிலிருந்த இரண்டு சந்தேக நபர்கள் தப்பிக்கும் நோக்கில் கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளனர்.
கீழே விழுந்தவர்களில் 52 வயதுடைய உள்ளூர் ஆடவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் குதித்த மற்றொரு நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் தற்போது போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ‘திடீர் மரணம்’ (Sudden Death) என வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த நபரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.




