கோலாலம்பூர்:
ஜோகூர் பாரு – மெர்சிங் சாலையின் 80-ஆவது கிலோமீட்டரில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய கொடூர விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று பிற்பகல் நிகழ்ந்த இந்த விபத்தில், Toyota Vios ரகக் கார் எதிர்ப்புறப் பாதைக்குச் சென்று, எதிரே வந்த Honda City ரகக் காரின் மீது பலமாக மோதியுள்ளது.
இந்தக் கோரவிபத்தில் முகமட் ஷுஹைரில் சோரைய்யா (வயது 21) – Vios காரின் ஓட்டுநர், நூர் பாத்தின் நபீலா யுஸ்ரிஷாரூன் (வயது 20) – Vios காரின் பயணி மற்றும் முகமட் அமீன் முக்தார் (வயது 35) – Honda City காரின் ஓட்டுநர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மாலை 5:25 மணியளவில் விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்துள்ள கோத்தா திங்கி மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுப்ரண்டன் யூசோப் ஒத்மான், Vios கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்ப்புறப் பாதைக்கு மாறி எதிரே வந்த காரின் மீது மோதியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறினார்.
உயிரிழந்த மூவருக்கும் தலை மற்றும் உடல்பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ உதவியாளரால் அவர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. உடல்கள் உடற்கூறாய்வுக்காகக் கோத்தா திங்கி மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இச்சம்பவம் குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் (அபாரகரமாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



