விசாரணைகளில், தேடப்பட்டு வரும் மூன்று சந்தேகநபர்களும் தற்போது இலங்கையில் தங்கியிருப்பதாகவும், சுற்றுலா விசாவில் நாட்டுக்கு வந்த அவர்களின் விசா காலம் நிறைவடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கொழும்புத் துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்களைத் தாக்கி, அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வரும் சீனர்கள் மூவரைக் கைது செய்வதற்கு பொலிஸார், பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை, கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு முன்னெடுத்து வருகிறது.
சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரு சீன நாட்டவர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மேலும் மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
விசாரணைகளில், தேடப்பட்டு வரும் மூன்று சந்தேகநபர்களும் தற்போது இலங்கையில் தங்கியிருப்பதாகவும், சுற்றுலா விசாவில் நாட்டுக்கு வந்த அவர்களின் விசா காலம் நிறைவடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனால், அவர்கள் விமானம் அல்லது கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ள பொலிஸார், அவர்களின் புகைப்படங்களையும் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
குறித்த மூன்று சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியை 0718 591 735 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு பொலிஸார், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.




