Last Updated:
இதுவரை இந்த ஆண்டில் கொரோனா தொற்று காரணமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து தடுப்பூசி காரணமாக, இந்த தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் இந்த கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் இந்த வைரசால் 250க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு உட்பட கர்நாடகா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கர்ப்பிணி உட்பட கர்நாடகத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் நேற்று ஒரே நாளில் 5 பேருக்கு தொற்று உறுதியாகி, மொத்த பாதிப்பு 40ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பெங்களூரு புறநகரை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த ஆண்டில் கொரோனா தொற்று காரணமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 பேரும், கர்நாடகா மாநிலத்தில் 1 உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் வேறு பாதிப்பு இருந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தொடர்பாக மத்திய மருத்துவத் துறை செயலாளர் புண்யா சலியா ஸ்ரீவாஸ்தவா தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் சுகாதார ஆராய்ச்சித் துறை செயலாளர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் மத்திய சுகாதாரத்துறை விழிப்புடன் இருப்பதாகவும், கொரோனா பரவலை உற்று கவனித்து வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


