Last Updated:
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணாவுக்கு, கொச்சின் மினரல்ஸ் ரூட்டைல் லிமிடெட் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை 12ம் தேதி கொச்சியில் ஆஜராக சம்மன் அனுப்பியது
கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் மகள் வீணா, வரும் 12 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கொச்சின் மினரல்ஸ் மற்றும் ரூட்டைல் லிமிடெட் நிறுவனம், பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கு சொந்தமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் பணம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.
இந்த நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி கொச்சின் மினரல்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், கடந்த மே 27 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் வீடு மற்றும் கோழிக்கோட்டில் உள்ள அவரது மகள் வீணாவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், பினராயி விஜயனின் மகள் வீணா நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், சிஎம்ஆர்எல் நிறுவனத்தின் தலைவர் சசிதரன் கர்தாவிற்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

