முக்கனி என்றழைக்கப்படும் மா, பலா, வாழையில் மாம்பழமும், பலாப்பழமும் கோடைக்காலம் ஒட்டிய சீசனில் தான் கிடைக்கும். அதனால் ஒவ்வொரு ஆண்டு சீசனின் போதும் மக்கள் மாம்பழங்களையும், பலாப்பழங்களையும் வாங்கி உண்ண ஆர்வம் காட்டுவர்.
அந்தவகையில் இந்த ஆண்டு பலாப்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலும் வியாபாரிகள் பலாப்பழம் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். குறுக்குத்துறை இசக்கி அம்மன் கோவில் எதிரே பலாப்பழங்கள் குவித்து வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.
இங்கு மட்டுமல்லாமல் ஜங்ஷன், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பலாப்பழங்கள் விற்பனை களைகட்டியுள்ளது. இதனை அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தமிழகத்தில் பண்ருட்டியிலும், மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளிலும் பலாப்பழம் விளைகிறது.
இதையும் படிங்க: ஸ்டார் ஹோட்டல்களில் கண்ணைக் கவரும் மலர்கள்… இங்கு தான் வளர்கிறது தெரியுமா…
மேலும் கேரளாவிலிருந்தும் அதிகளவில் பலாப்பழங்கள் தமிழகத்திற்குக் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன. பலா காய், பலாப்பழ சிப்ஸ் என பல வடிவங்களில் மக்கள் பலாப்பழத்தினை விரும்பி ருசிக்கின்றனர். ஆனால் பலாப்பழத்தை வேறு வடிவத்தில் இல்லாமல் பழமாகச் சாப்பிட கேரளாவிலிருந்து கொண்டுவரும் பலாப்பழ ரகங்களை விட பண்ருட்டி பலாப்பழத்திற்குச் சுவை அதிகம் என விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக பண்ருட்டியிலிருந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை பலாப்பழங்கள் லாரியில் வந்து திருநெல்வேலியில் இறங்குகின்றன. பலாப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் என்பதால் பொதுமக்களும் விரும்பி வாங்கி உண்கின்றனர்.
இதுகுறித்து பலாப்பழ வியாபாரி திருமூர்த்தி கூறுகையில், “பலாப்பழம் என்றாலே நம் நினைவுக்கு வரும் ஊர் பண்ருட்டி தான். அந்த ஊர் பலாப்பழத்திற்குத் தனிச் சுவை உண்டு. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பலாப்பழம் விளைந்தாலும் பண்ருட்டி பலாப்பழத்திற்கு என்று தனி மார்க்கெட் உள்ளது. இதற்கு காரணம் அதன் அலாதியான சுவை. பண்ருட்டி பகுதியில் உள்ள மண்வளம், தட்பவெப்ப நிலை தான் அந்த பலாப்பழத்தின் ருசிக்கு காரணம் ஆகும்.
இதையும் படிங்க: தாத்தா, பாட்டியின் ஆரோக்கியத்தின் சீக்ரெட் இது தான்.. பாரம்பரிய பாத்திரங்களை நாடும் மக்கள்..
ஆண்டுதோறும் ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் பலாப்பழம் விளையும் சீசன் ஆகும். அதிலிருந்து நான்கு மாதங்கள் வரை விற்பனை களைகட்டும். பண்ருட்டி அருகே உள்ள நெய்வேலி உள்ளிட்ட கிராமங்களில் அதிக அளவு பலாப்பழம் விளைவிக்கப்படுகிறது. அங்கு விளைவிக்கப்படும் பழங்கள் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
குறிப்பாகத் தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி பகுதிகளுக்கும் வெளிமாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அதிக அளவில் பண்ருட்டி பலாப்பழம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த வருடம் தட்பவெப்ப நிலை சாதகமாக இருப்பதால் பலாப்பழம் விளைச்சல் அதிகமாக இருக்கிறது. பலாப்பழம் ஒன்று 200 முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. எடைக்கு ஏற்ப பலாப்பழத்தின் விலை மாறுபடும்.
திருநெல்வேலியில் பல இடங்களில் சாலையோரம் அதிக அளவில் பலாப்பழங்கள் வைக்கப்பட்டு வியாபாரம் செய்யப்படுகின்றன. கார், வேன் போன்ற வாகனங்களில் அவ்வழியாகச் செல்வோர் அதிக அளவில் பலாப்பழங்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதனால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
