Last Updated:
கேரளாவில் காவலரை தாக்கிய SFI அமைப்பினர். வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ காட்சிகள்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மால் ஆஃப் ட்ராவன்கூர் (Mall of Travancore) வளாகத்தில், நேற்று சிவில் போலீஸ் அதிகாரி மிதுன் ராய் (Mithun Roy) மற்றும் அவரது குடும்பத்தினர் மீது SFI அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சங்குமுகம் கடற்கரையில் நடந்த ஒரு மோதலில் மிதுன் ராய் SFI தொண்டர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மிதுன் ராய் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
மிதுன் ராய் தனது குடும்பத்தினருடன் மாலுக்கு வந்தபோது, ஒரு கும்பல் அவரைத் தடுத்து நிறுத்தித் தாக்கியதோடு, அவதூறான வார்த்தைகளால் பேசியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.
இச்சம்பவம் தொடர்பாக வஞ்சியூர் போலீசார் SFI அமைப்பினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் SFI அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி மிதுன் ராய் மற்றும் அவரது நண்பர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பொது இடத்தில் காவலரை தாக்கிய SFI அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் காவலர் மீதே வழக்கு பதிவு செய்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் போலீசார் மீது SFI அமைப்பினர் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகளும் வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


