Last Updated:
திருச்சூரில் 6 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஜோஜோ, சிறுவன் எதிர்ப்பு காட்டியதால் தண்ணீரில் மூழ்கடித்து கொன்றார்.
கேரள மாநிலம் திருச்சூரில், 6 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றபோது எதிர்ப்பு காட்டியதால் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற இளைஞர் போலீசாரிடம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், மலாகுழூர் என்ற பகுதியில் 6 வயது சிறுவன் ஒருவன் மாலை வேளையில் நண்பர்களுடன் விளையாடச் சென்றுள்ளார். அப்போது மற்றவர்கள் எல்லாம் வீட்டுக்கு வந்து விட சிறுவன் மட்டும் காணாமல் போனார். சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் கிராமத்தின் இண்டு இடுக்கு என ஒரு இடம் விடாமல் தேடி வந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசாரும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்நிலையில், இரவு 9.30 மணியளவில் அருகிலுள்ள சேற்று குளத்தில் இருந்து சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. இதனால் அந்த கிராமமே பதற்றத்தில் ஆழ்ந்தது. சிறுவனை சேற்றுக் குளத்தில் மூழ்கடித்து கொன்றது யார்? என்பது குறித்த விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஜோஜோ என்ற இளைஞருடன் சிறுவன் நெல்வயலில் நடந்து சென்றதாக சிலர் கூறியிருக்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுவனுடன் ஜோஜோ ஓடிச் செல்லும் காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தது. ஜோஜோவை பிடித்த போலீசார் அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையின்போது, ஆரம்பத்தில் தனக்கு எதுவும் தெரியாது என கூறி சாதித்திருக்கிறார். இருப்பினும் விடாத போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார். சிறுவனிடம் ஜோஜோ பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றிருக்கிறார்.
அப்போது சிறுவன் எதிர்ப்பு காட்டியதால் சிறுவனின் முகத்தை நீருக்கடியில் அழுத்தி கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். காணாமல்போன சிறுவனை ஊரே சேர்ந்து தேடியபோது ஜோஜோவும் அவர்களுடன் சேர்ந்து தேடுவது போல் நாடகமாடியிருக்கிறார். அவர் தான் கொலையாளி என்பது தெரிந்ததும் அப்பகுதி மக்கள் அவர் மீது கடும் ஆத்திரமடைந்தனர். பொதுமக்களிடமிருந்து ஜோஜோவை காப்பாற்றி பாதுகாப்பாக போலீசார் அழைத்துச் சென்றனர்.
சம்பவப் பகுதிக்கு ஜோஜோவை அழைத்துச் சென்ற போலீசார். அவர் எப்படி கொலை செய்தார் என்பதை கேட்டறிந்தனர். அவர் மீது, கடத்தல், கொலை, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கைதான ஜோஜோ திருட்டு வழக்கு ஒன்றில் சிக்கி அண்மையில் தான் ஜாமினில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
April 12, 2025 11:47 AM IST
6 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சி.. எதிர்ப்பு தெரிவித்ததால் கொடூர கொலை செய்த இளைஞர்!


