கேரளாவில் பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு முதன்முறையாக நடிகர் சுரேஷ் கோபி மூலம் பாஜக வெற்றிக் கணக்கைத் தொடங்கியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியாவின் தென்கோடி மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் பாஜக முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் நன்கு அறியப்பட்ட வேட்பாளர் கே.முரளீதரனை மூன்றாவது இடத்திற்கும், வலுவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் வி.எஸ்.சுனில்குமாரை இரண்டாவது இடத்திற்கும் தள்ளி, சுரேஷ் கோபி சுமார் 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
மும்முனை போட்டி நிலவிய திருச்சூர் தொகுதியில், பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி 4,12,338 வாக்குகளை பெற்ற நிலையில், அவருக்கு அடுத்ததாக, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனில்குமார் 3,37,652 வாக்குகளையும், காங்கிரசின் முரளீதரன் 3,28,124 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
சுரேஷ் கோபி திருச்சூரை பூர்வீகமாக கொண்டவர் இல்லை என்றாலும், பல ஆண்டுகளாக வாக்காளர்களுக்கு அறிமுகமாகி வந்தார். கடந்த 2016ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சுரேஷ் கோபி, கடந்த 2019 மக்களவைத் தேர்தலிலும், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக சார்பில் திருச்சூரில் களமிறக்கப்பட்டார். ஆனால் இரண்டிலும் தோல்வியடைந்த அவர், இந்த முறை கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
தேசிய விருது பெற்ற நடிகர் என்றாலும், அரசியலுக்கு தேவையான சாதுரியம் அவரிடம் இல்லை. எனவே, அவரது வெற்றிக்கு அவரது கடின உழைப்பு மட்டுமே காரணமாக இருந்துள்ளதாக, அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவிக்கின்றனர். அத்துடன், 2 தொண்டு நிறுவனங்களை சுரேஷ் கோபி நடத்தி வருவதால், அதன் மூலம் கிடைத்த பேரும், இந்த வெற்றிக்கு உதவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க:
உ.பியில் பாஜகவை பின்னுக்கு தள்ளி சமாஜ்வாதி அதிக இடங்களை அள்ளியது எப்படி?
சுரேஷ் கோபி மீது அண்மையில் ஒரு பெண் பத்திரிகையாளர் தொடுத்த வழக்கு அவரது அரசியல் வாழ்க்கையில் சவாலாக இருந்த நிலையில், அவரும், அவரது குடும்பத்தினரும் தேவாலயம் ஒன்றிற்கு கொடுத்த தங்க கிரீடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், பாஜக தேசிய தலைமை, குறிப்பாக பிரதமர் மோடி ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்ற சுரேஷ் கோபி, தற்போது பாஜகவின் வெற்றிக் கணக்கை கேரளாவில் தொடங்கி வைத்திருக்கிறார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
