ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சீனியர் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த அணிக்கான கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு கேப்டன்ஷிப் ரோஹித் சர்மாவிடம் இருந்த நிலையில் தற்போது கேப்டன்ஷிப் சுப்மன் கில்லிடம் வழங்கப்பட்டுள்ளது.
2027 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு கேப்டனை தயார் செய்யும் விதமாக கேப்டன்ஷிப் மாற்றம் நடந்துள்ளதாக தேர்வுக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
ஷுப்மன் கில்லை கேப்டனாக நியமித்திருப்பது, அணியின் எதிர்காலப் பார்வையைக் குறிக்கிறது. குறிப்பாக, 2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரோஹித் ஷர்மாவைத் தொடர்ந்து கேப்டனாக வைத்திருக்க வாய்ப்பிருந்தாலும், அணியின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக முன்கூட்டியே ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று தேர்வுக்குழு கருதியிருக்கலாம்.
கேப்டனாக கில்லின் மிகப்பெரிய சவால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில்தான் இருந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட ‘ஆண்டர்சன் டெண்டுல்கர் டிராபி’ தொடரை 2-2 என்ற சமநிலையில் முடித்து, அவர் தனது முதல் சவாலில் மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் தேர்ச்சி பெற்றார்.
ரோஹித் கேப்டனாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அணியை வழிநடத்தும் அவரது குணங்கள் இப்போதும் அணிக்குத் தேவைப்படும். கேப்டனாக இல்லாவிட்டாலும், ரோஹித்தின் மரியாதை அணிக்குள் குறையாது என்று தெரிவித்துள்ளார்.
October 05, 2025 9:06 PM IST

