மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கடந்த 18ஆம் தேதி இளம்பெண் ஷியா கோயல் என்பவர் தனது வருங்கால கணவன் கேதன் அகர்வால் என்பவரை மலை உச்சியில் இருந்து 350 அடி பள்ளத்தில் காதலன் துணையோடு தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இக்கொலை தொடர்பாக ஷியாவும், அவரது காதலன் சேதன் சௌத்ரியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் அடுத்தடுத்து என பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன. ஷியாவும் அவரது கூட்டாளி சேதனும் மிக நுணுக்கமாக கொலையை திட்டமிட்டு, அதை ஒரு விபத்தாக மாற்ற முயன்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று, புனே லோனாவாலாவில் உள்ள லோஹாகட் கோட்டைக்கு சென்று ஷியா மற்றும் கேதனை காதலன் சேதன் சௌத்ரி பின்தொடர்ந்து சென்றுள்ளார். மலை முகடுக்கு அருகில் சென்று காத்திருந்த சேதன், ஷியாவின் சிக்னலுக்காக அங்கு காத்திருந்துள்ளார். ஷியா சிக்னல் கொடுத்தவுடன் கேதன் அகர்வாலை பின்னால் இருந்து காதலன் சேதன் சௌத்ரி தள்ளிவிட்டுள்ளார் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
போலீஸாரிடம் பிடிபடாமல் இருக்க காதலன் சேதன் தனது செல்போனை தனது கடையில் வைத்துவிட்டு கடை ஊழியர் ஒருவரின் போனை எடுத்துச்சென்றிருக்கிறார் என்கிற தகவலும் தெரியவந்துள்ளது. இந்த திட்டமிட்ட கொலையை அரங்கேற்ற ஷியாவும், காதலன் சேதனும் தேர்ந்தெடுத்த ஒதுக்குப்புறமான பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் பொதுவாக செல்ல மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.
மேலும் வார நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு கொலை செய்ய அந்த இடத்தை தேர்வு செய்துள்ளனர். இருவரும் அங்கு முன்கூட்டியே சென்று பார்வையிட்டு அந்த இடத்தை தேர்வு செய்திருக்கலாம் என்கிற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது. இந்த வழக்கில் ஷியா தனது வாக்குமூலத்தை மாற்றி கூறியதே அவர்கள் சிக்க காரணம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
முதலில் கேதன் அகர்வால் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும்போது தவறி விழுந்து விட்டதாக ஷியா கூறியிருக்கிறார். பின்னர் அவர் தண்ணீர் பாட்டிலை கொடுக்கும்போது அவர் விழுந்துவிட்டார் என்று கூறியிருக்கிறார். அதேநேரம் ஷியாவின் செல்போனில் சம்பவத்தன்று எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் கூட இல்லை. இது மேலும் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. ஷியாவும் கேதனும், திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டுக்காக இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் விமான நிலையத்திற்கு சென்றபோது கேதனின் பாஸ்போர்ட்டை காணவில்லை. இதனால் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. முன்னதாக ஒரு ரெஸ்டாரண்டிற்கு சென்றபோது, அந்த பாஸ்போர்ட்டை கிழித்துப் போட்டதே ஷியாதான் என்பது பின்பு விசாரணையில் அம்பலமானது. ஏன் பாஸ்போட்டை கிழித்தெறிந்தீர்கள் என ஷியாவிடம் போலீசார் கேட்டபோது, பாலி தீவுக்கு செல்வதை காதலன் சேதன் விரும்பவில்லை எனக் கூறியிருக்கிறார் .
ஷியா மற்றும் சேதனின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, நிச்சயதார்த்தத்திற்குப் பின் சுமார் எட்டு மாதங்களாக இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்தது தெரியவந்துள்ளது. ஜனவரி 1 மற்றும் ஜூன் 18 வரை அவர்கள் 2,004 முறை மொத்தம் 238 மணிநேரம் போனில் பேசியிருக்கின்றனர். காதலன் சேதனிடம் ஏன் இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்திருக்கலாமே’என்று போலீஸார் கேட்டதற்கு, அத்திட்டத்திற்கு ஷியா ஒப்புக்கொள்ளவில்லை என்றும், அப்படி ஓடுவது குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்றும் ஷியா தெரிவித்ததாக சேதன் விளக்கம் அளித்திருக்கிறார்.
அதோடு கொலை நடப்பதற்கு ஒரு நாள் முன்பு சேதனை ஷியா ரெஸ்ராரெண்ட் ஒன்றில் சந்தித்து பேசி இருக்கிறார். இந்த சந்திப்பின்போது கொலையை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து இருவரும் இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர். கேதன் தள்ளிவிட்டு கொல்லப்படுவதற்கு முன்பு மூன்று முறை கொலைமுயற்சியில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவலும் தற்போது தெரியவந்துள்ளது.
பின்னர் ஷியா, உங்களைக் காப்பாற்றத்தான் அப்படித் தள்ளிவிட்டேன். ஏனென்றால் அருகில் ஒருபாம்பு உங்களை கடிப்பதற்காக படம் எடுத்துக் கொண்டிருந்தது என ஒரு கிரேட் நாடகத்தை அரங்கேற்றி அழுது புலம்பி கேதனை நம்ப வைத்திருக்கிறார். இரண்டாவது முயற்சி ஜூன் 4 அன்று திட்டமிடப்பட்டது. ஆனால் கேதனின் தாய் அவரை மீண்டும் கோட்டைக்குச் செல்ல அனுமதிக்க மறுத்ததால் அது முறியடிக்கப்பட்டது.
ஜூன் 14 அன்று மூன்றாவது முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஷியா, கேதனை லோகட் பகுதிக்குத் திரும்ப அழைத்து வந்தார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த முயற்சியைக் கைவிட்டார்.
நான்காவது முயற்சியாக ஜூன் 18ம் தேதி வெற்றிகரமாக கேதனை கீழேதள்ளிவிட்டு கொலையை அரங்கேற்றியுள்ளனர். ஷியாவின் குடும்பத்தினர் தான் இந்த திருமணத்தை நடத்த வேண்டும் என விரும்பி கேட்டு வந்துள்ளனர்.
திருமணம் பிடிக்கவில்லை என்று கூறியிருந்தால், எந்த பிரச்சினையும் இன்று திருமணத்தை நிறுத்தியிருப்போம் என்றும், எதற்காக இப்படி ஒரு கொலை அரங்கேற்ற வேண்டும் என்றும் கேத்தனின் குடும்பத்தினர் கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

