கோலாலம்பூர்:
பகாங் மாநிலம் கெந்திங் ஹைலண்ட்ஸ் பகுதியில் உள்ள ஸ்கை அவென்யூ வணிக வளாகத்தில் அமைந்துள்ள நகை கடை ஒன்றில், வெறும் இரண்டு நிமிடங்களில் கடைக்குள் புகுந்த மூன்று மர்ம நபர்கள் சுமார் 1.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகளையும், தங்கம் கட்டிகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளதாகப் பகாங் மாநில இடைக்காலக் காவல் துறைத் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் அயோப் தெரிவித்துள்ளார்.
தலைக்கவசமும், முகமூடியும் அணிந்திருந்த அந்தச் சந்தேக நபர்கள் கோடரி, சிறிய அளவு கடப்பாரை ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தத் துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்றும், காலைப் வேலையில் நடந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக அங்கிருந்து காரில் தப்பியோடிவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, குற்றவாளிகளைக் கைது செய்யப் புக்கிட் அமான், பகாங் குற்றவியல் புலனாய்வுப் பிரிவுகள் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதுடன், அவசர காலச் காவல்துறை சோதனைக் சாவடிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதனிடையே, காவல் துறையினர் இந்தச் சம்பவத்தைத் தீவிரமாக விசாரித்து வருவதுடன், இது தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும், பொதுமக்கள் இது குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை எனவும் பகாங் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



