கோலாலம்பூர்:
கடந்த வியாழக்கிழமை, சிக், தாமான் செஜாத்தேராவில் உள்ள ஒரு ஹோம்ஸ்டேயில் நடத்திய சோதனையின் போது, நான்கு சக்கர வாகன திருட்டு கும்பலைச் சேர்ந்ததாக நம்பப்படும் மூன்று பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
நாட்டின் எல்லை தாண்டிய கடத்தலுக்காக மலாக்காவில் வாகனங்களைத் திருடும் கும்பல் பற்றிய உளவுத்துறை தகவலைத் தொடர்ந்து, அதிகாலை 2.30 மணியளவில் அங்கு சோதனை நடத்தப்பட்டதாக, புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் கூறினார்.
இதன்போது 35 முதல் 37 வயதுக்குட்பட்ட மூன்று சந்தேக நபர்கள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், ஒரு கத்தியைக் கொண்டு ஆக்ரோஷமாக தாக்கமுயன்றதாக அவர் கூறினார்.
எனவே தற்காப்புக்காக போலீசார் திருப்பிச் சுட்டனர், இதன் விளைவாக அனைத்து சந்தேக நபர்களும் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்தனர்.
அதைத் தொடர்ந்து நடந்த தேடுதலில் இரண்டு கைத்துப்பாக்கிகள், பல தோட்டா உறைகள் மற்றும் சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு கத்தி என்பன கண்டுபிடிக்கப்பட்டது.
மூன்று பேரும் நெகிரி செம்பிலானைச் சேர்ந்தவர்கள் என்றும், வாகனத் திருட்டு மற்றும் போதைப்பொருள் தொடர்பான முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்டிருப்பதாகவும் முகமட் ஷுஹைலி கூறினார்.
மேலும் போலீஸ் சோதனையின் போது, ஏப்ரல் மாதம் பெட்டாலிங் ஜெயாவில் திருடப்பட்டதாகக் கூறப்படும் ஹோண்டா CR-V காரையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
அத்தோடு 26 போலி உரிமத் தகடுகள் மற்றும் கார் திருட்டுக்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு கருவிகள் இருப்பது தெரியவந்தது.
கடந்த 2023 முதல் செயல்பட்டு வரும் இந்த கும்பல், 4×4 வாகனத் திருட்டு தொடர்பான 73 வழக்குகளுக்குப் பொறுப்பானதாக நம்பப்படுகிறது, இந்தக்கும்பல் சட்டவிரோத பாதைகள் வழியாக எளிதாக நாட்டின் எல்லையை கடந்து வாகனங்களை கடத்தியதாகவும் நம்பப்படுகிறது என்று அவர் சொன்னார்.
அதே நாளின் பிற்பகுதியில், சோங்க்லாவில் மலேசிய மற்றும் தாய்லாந்து அதிகாரிகள் மேற்கொண்டகூட்டு நடவடிக்கையில் கடத்தல் வாகனங்களை கைமாற்றுபவர்கள் என்று நம்பப்படும் நான்கு தாய் நாட்டினர் கைது செய்யப்பட்டனர், அதே நேரத்தில் கும்பல் தலைவர் மற்றும் மீதமுள்ள உறுப்பினர்களைக் கண்டறியும் முயற்சிகள் தொடர்கின்றன என்று அவர் கூறினார்.


