கேரளாவில் கூகுள் மேப் பார்த்து ஓட்டிச் செல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகள் கார், குருப்பந்தரா அருகே ஆற்றுக்குள் இறங்கி, மூழ்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் உயிர் தப்பினர்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இருந்து ஒரு பெண் உள்பட 4 பேர் கொண்ட குழுவினர் சுற்றுலாவுக்கு காரில் கேரளா வந்தனர். இவர்கள் நேற்று இரவு ஆலப்புழா நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பயணித்த சாலை, கனமழை காரணமாக வெள்ள நீரால் சூழப்பட்டிருந்தது. அப்போது, சுற்றுலாப் பயணிகளுக்கு வழி தெரியாததால், கூகுள் மேப்பை பயன்படுத்தி சென்றனர்.
குருப்பந்தாரா பகுதியில் சென்றபோது, தவறுதலாக வழி மாறி, கார் அப்பகுதியில் உள்ள ஆற்றுக்குள் இறங்கி மூழ்கியது. இதனால் அவர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அப்பகுதியினர் மற்றும் போலீஸாரின் உதவியுடன் 4 பேரும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இருப்பினும் அவர்கள் வந்த கார் நீரில் மூழ்கி விட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக காடுதுருத்தி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது நீரில் மூழ்கிய காரை வெளியே எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
கேரளாவில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், கூகுள் மேப்பில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி ஓட்டப்பட்ட கார் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த இரண்டு இளம் மருத்துவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மழைக்காலத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான எச்சரிக்கை வழிகாட்டுதல்களை கேரள காவல் துறை வெளியிட்டுள்ளது.


