Last Updated:
செல்போனில் கூகுள் மேப் காட்டிய, உப்ரேரா பாலத்தின் வழி வேனை ஓட்டிச் சென்றுள்ளார்.
ராஜஸ்தானில் ஆற்று வெள்ளத்தில் வேன் அடித்துச் செல்லப்பட்டதில் சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவின் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில், கானா கெடா கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் ஒரே வேனில் அனைவரும் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் கனமழை பெய்ததால் மாட்டிரியாகண்டியா (Matrikundiya) அணையில் இருந்து உபரி நீரி திறக்கப்பட்டுள்ளது. இதனால், பனாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பனாஸ் ஆற்றுப் பாலத்தின் வழி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதும், கானா கெடா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாற்று வழியாக ஆற்றை கடந்து செல்ல முயன்றுள்ளனர். இதற்காக, வேன் ஓட்டுநர் கூகுள் மேப் உதவியை நாடியுள்ளார். தனது செல்போனில் கூகுள் மேப் காட்டிய, உப்ரேரா பாலத்தின் வழி வேனை ஓட்டிச் சென்றுள்ளார்.
நள்ளிரவு நேரத்தில் பாலத்தில் சென்றபோது ஆற்று வெள்ளத்தில் வேன் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரும் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடியுள்ளார். பாலத்தில் இருந்து வெகு தொலைவிற்கு வேன் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் 5 பேர் மட்டும், கண்ணாடியை உடைத்துக் கொண்டு மேற்கூரைக்கு வந்துள்ளனர். அதில், ஒருவர் செல்போன் மூலம் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் அங்கு விரைந்து வந்துள்ளனர்.
அப்போது, வேனின் மேற்கூரையில் இருந்தவர்கள் செல்போனில் டார்ச் லைட் அடித்து சமிக்ஞை கொடுத்துள்ளனர். அதைக் கண்டு அங்கு சென்ற போலீசார், கிராம மக்களின் உதவியுடன் 5 பேரை பாதுகாப்பாக மீட்டனர். ஆனால், இரு சிறுமிகள் மற்றும் இரு பெண்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணி காலையில் தொடர்ந்து நடைபெற்றது. அதில், ஒரு சிறுமி மற்றும் இரு பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்த விபத்தை தொடர்ந்து உப்ரேரா பாலம் வழியாக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். ஆன்மீக நிகழ்வுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது ஆற்று வெள்ளத்தில் வேன் அடித்துச் செல்லப்பட்டதில், சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் ராஜஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
August 28, 2025 5:26 PM IST


