குவாந்தான், பிப்ரவரி 20, 2026:
குவாந்தான், தாமான் செராத்திங் டாமாயில் (Taman Cerating Damai) கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், மனநலப் பாதிப்புகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனப் பகாங் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
பகாங் மாநில சமூக நலன், பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் குழுவின் தலைவர் டத்தோ சபரியா சைடான், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின் செய்தியாளர்களிடம் பேசினார்: அதில் “”இந்தக் கொடூரச் சம்பவம் மனநலப் பிரச்சினைகளால் ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் மேலதிக விசாரணை நடத்த வேண்டும்.
வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்பவர்கள் பொறுமை காக்க வேண்டும். எமது பிரிவின் கீழ் உள்ள தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் (LPPKN) மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை மூலம் தேவையான ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற முடியும்” என்று அவர் சொன்னார்.
தனது சுற்றுப்புறத்தில் யாராவது மனநலப் பாதிப்பிற்கான அறிகுறிகளைக் காட்டினால், உடனடியாக மருத்துவமனை அல்லது அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறு டத்தோ சபரியா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார். ரமலான் மாதத்தின் தொடக்கத்தில் இத்தகைய இதயத்தை ரணமாக்கும் சம்பவம் நடந்தது மிகுந்த வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த பிப்ரவரி 17 அன்று காலை 7 மணியளவில், பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரியும் நபர் ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்கள் நால்வரைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார்.
இந்தப் படுகொலைகளுக்குப் பொருளாதார நெருக்கடி ஒரு காரணமாக இருக்கலாம் எனப் பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ யஹாயா ஒத்மான் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த 15 வயது சிறுவன் கடும் அதிர்ச்சியில் உள்ளான். அவன் தற்போது திரங்கானு, கெமாமனிலுள்ள தனது தந்தையுடன் தங்கியுள்ளான்.
பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லாஹ் மற்றும் பகாங் இளவரசர் தெங்கு ஹசனல் இப்ராஹிம் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கியதோடு, தங்கள் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் பதிவு செய்துள்ளனர்.




