கிள்ளான்:
ஜாலான் புடிமான், பகுதி 22 இல் குழாய் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக மேற்கொள்ளப்படும் அவசர பழுதுபார்ப்புப் பணிகளைத் தொடர்ந்து, கிள்ளான், ஷா ஆலம் மற்றும் பெட்டாலிங் ஆகிய மாவட்டங்களில் உள்ள மொத்தம் 28 பகுதிகளுக்கு தண்ணீர் விநியோக தடை ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை 6 மணிக்கு திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டது, பழுதுபார்க்கும் பணிகள் இன்று முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பழுதுபார்க்கும் பணிகள் முடிந்து, முக்கிய விநியோக முறை சீரானவுடன், பயனாளிகளுக்கு தண்ணீர் விநியோகம் கட்டம் கட்டமாக மீட்டமைக்கப்படும்.
மேலும் “செவ்வாய்கிழமை காலை 6 மணிக்குள் நீர் விநியோகம் முழுமையாக மீட்கப்படும் என்றும் நீர் வழங்கல் நிறுவனமான ஆயிர் சிலாங்கூர் நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் “ஆயிர் சிலாங்கூர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் டேங்கர்களை அனுப்பி உதவிகளை வழங்கும் என்றும், இதில் மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயாலிசிஸ் மையங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் நடைபெறும் வளாகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்றும் அது தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை “பயனர்கள் Air Selangor செயலி, Facebook, Instagram மற்றும் X போன்ற எங்கள் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு சேனல்களைப் பார்க்கவும் அல்லது 15300 இல் Air Selangor ஐத் தொடர்புகொள்ளவும் அல்லது https://www.airselangor.com/ ஐப் பார்வையிடவும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


