Last Updated:
வயிற்றை திருட்டு நகையை போட்டு வைக்கும் வங்கி லாக்கராக பயன்படுத்தி வந்த திருட்டு பெண் சிக்கியது எப்படி?.
கேரளாவில் நகையை திருடி வாயில் போட்டு விழுங்கிய பெண்ணை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்து போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மம்பத் புலிக்காலோடி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல் நலம் பாதித்த தனது 2 வயது பெண் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். நீலம்பூர் பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு சென்ற அவர் குழந்தையை மருத்துவமனையில் உள்ள வராண்டாவில் விளையாட விட்டு விட்டு காத்திருந்தார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் கழுத்திலிருந்த மூன்றரை கிராம் தங்க செயின் காணாமல் போனதைக் கண்டு தாய் அதிர்ச்சியடைந்தார். அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்தும் நகை கிடைக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து தனது குழந்தையின் காணாமல்போன நகை குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது, இளம்பெண் ஒருவர் குழந்தையை தூக்கி கொஞ்சிக் கொண்டிருந்ததாக கூறியிருக்கின்றனர். இதையடுத்து அந்த பெண்ணிடம் சென்று குழந்தையின் தாய் விசாரித்திருக்கிறார். ஆனால் அவர் சரியாக பதில் கூறாமல் தட்டிக்கழிக்க முயன்றிருக்கிறார். இதனால், அந்த பெண்தான், குழந்தையின் நகையை திருடியிருக்க வேண்டும் என்று அனைவரும் சந்தேகம் அடைந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து உடனே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதையடுத்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போதும், நான் திருடவில்லை என கெத்தாக நின்றிருக்கிறார் அந்த பெண். இருந்தபோதிலும் அவரின் மீதான சந்தேகம், போலீசாருக்கு விலகவில்லை. ஆகவே அவரை கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்தனர்.
அப்போது காணாமல்போன குழந்தையின் தங்க நகை, இளம்பெண்ணின் வயிற்றுக்குள் இருந்தது தெரியவந்தது. அவ்வளவு நேரம் விசாரித்தபோதும் உண்மையைக் கூறாமல் தம் கட்டியவர் கடைசியில் எக்ஸ்ரேயால் வசமாக சிக்கினார். விசாரணையில் அந்த பெண் நீலம்பூர் பகுதியை சேர்ந்த 35 வயதான சமீனா என்பது கண்டறியப்பட்டது. கிளினிக்கில் குழந்தையை கொஞ்சுவது போல் நடித்து, குழந்தை கழுத்தில் அணிந்திருந்த நகையை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
திருடிய நகைகளை பத்திரமாக பதுக்க தனது வயிற்றையே வங்கி லாக்கரைப் போல் பயன்படுத்தியிருக்கிறார் அந்த பெண். இதையடுத்து சமீனா வயிற்றுக்குள் இருக்கும் தங்க நகையை வெளியே எடுப்பதற்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்து இனிமா கொடுத்தனர். ஆனால் பலமுறை முயற்சி செய்தும், இளம்பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து தங்க நகை மட்டும் வெளியே வரவில்லை. பிறகு மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் அதே முறையை பயன்படுத்தி நகையை மீட்டனர். திருட்டு நகையை வயிற்றுக்குள் விழுங்கி கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை கழுத்தில் இருந்த நகை திடீர் மாயம்.. மருத்துவமனையில் பெண்ணை எக்ஸ்ரே செய்தபோது அதிர்ச்சி.. என்ன நடந்தது?


