Last Updated:
மும்பை பவாய் பகுதியில், ரோஹித் ஆர்யா 17 குழந்தைகள் உட்பட 19 பேரை பிணைக் கைதிகளாக வைத்தார்.
மும்பையில் 17 குழந்தைகள் உட்பட 19 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தவரை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டிக்கொன்றனர்.
பவாய் பகுதியில் வெப் சீரிஸில் நடிப்பதற்கான ஆட்கள் தேர்வு நடைபெறுவதாக செய்தி வெளியானது. அது போலி செய்தி என அறியாமல் சென்றவர்களில், 17 குழந்தைகள் உள்பட 19 பேரை, அங்கிருந்த நபர் ஸ்டூடியோவில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அனைவரையும் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனிடையே, பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமென்றால் தனது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுமென அந்த நபர் வீடியோ வெளியிட்டார். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் முழு கட்டடத்தையும் தீயிட்டு கொளுத்துவேன் என மிரட்டினார்.
இதைத் தொடர்ந்து, ஸ்டூடியோவின் கழிவறை வழியாக சாதூர்யமாக நுழைந்த போலீசார், அந்த நபரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் துப்பாக்கியால் சுட முயன்றதால் போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்நிலையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம், உயிரிழந்தவர் நாக்பூரைச் சேர்ந்த ரோஹித் ஆர்யா என்பதும், அவர் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர் என்பதும், யூடியூபராக இருந்தவர் என்பதும் தெரியவந்தது.
Mumbai,Maharashtra
October 30, 2025 5:00 PM IST
குழந்தைகள் உட்பட 19 பேரை பிணைக் கைதியாக்கிய பள்ளி ஆசிரியர்.. என்கவுன்டர் செய்த போலீஸ்.. மும்பையில் பரபரப்பு!


